வடசென்னை, வில்லிவாக்கம் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிப்பு
சென்னை: வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 டிரான்ஸ்பார்மர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.

நுங்கம்பாக்கம்
சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையின் பெரும்பாலான இடங்களில் 10 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. கிண்டி ஒலிம்பியா அருகே சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. வடபழனி, அசோக் நகர் பகுதிகளில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள்
சென்னை எம்எம்டிஏ காலனி பகுதியில் சாலையில் வெள்ளநீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் ஒரு பக்கமாக சென்றன. இதன் காரணமாக அந்த சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வெளியூர் சென்ற பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

சைதாப்பேட்டை
சைதாப்பேட்டை பகுதியில் வெள்ள நீர் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது. இதேபோல் ஈக்காட்டுதாங்கல் பகுதியிலும் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. சென்னை கோட்டூர் பகுதியில் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் வழிந்து ஓடுகிறது. வில்லிவாக்கம் பகுதியில் இரு சக்கர வாகனங்களை பாதி அளவிற்கு மூழ்கும் அளவுக்கு சாலையில் வெள்ளநீர் மிகுந்து காணப்படுகிறது.

வடசென்னை
சாலி கிராமம், வேளச்சேரி, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வட சென்னை பகுதியில் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 டிரான்ஸ்பார்மர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதிகாரிகள் தகவல்
மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை காரணமாக சென்னையில் மின்சாரம் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டது. தற்போது படிப்படியாக மின்சாரம் கொடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications