மறைந்தார் மக்களின் அன்பைப் பெற்ற 5 ரூபாய் டாக்டர்.. பெரும் சோகத்தில் வண்ணாரப்பேட்டை
5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் இன்று காலமானார்.
சென்னை: "5 ரூபாய் டாக்டர் இறந்துவிட்டாராமே..." என்று வண்ணாரப்பேட்டையே நொறுங்கி போய் உள்ளது.
கல்பாக்கம் கொடைப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். ரொம்ப ஏழை. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அவசரம், ஆபத்து என்றால் கூட அந்த கிராமத்தில் ஒரு ஆஸ்பத்திரிகூட இல்லை.
அதனால் 30 கி.மீ. தூரத்துக்கு நோயாளியை தூக்கி கொண்டு ஓட வேண்டிய நிலைமை இருந்தது. அது பாம்பு, தேள் கடித்தவர்களுக்குகூட இந்த நிலைமைதான்!!
ஏழை மக்கள்
இதனை மாற்ற நினைத்தவர்தான் ஜெயச்சந்திரன். இதற்காக நன்றாக படித்தார். மெட்ராஜ் மெடிக்கல் காலேஜில்தான் டாக்டர் படித்து முடித்தார். படிக்கும்போதே, மருத்துவ வசதி இல்லாத இடத்தில் சென்றுதான் வைத்தியம் பார்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டார்.
2 ரூபாய் கட்டணம்
அதுபோல ஆஸ்பத்திரி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் இருந்த வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவுக்குள் 1971-ம் ஆண்டில் நுழைந்தார். ஒரு கிளினிக் ஆரம்பித்தார். தன்னிடம் வரும் நோயாளியிடம் 2 ரூபாய் வாங்க தொடங்கினார்.
5 ரூபாய்
பிறகு 5 ரூபாய் வரை வாங்கினார். கடைசிவரை இந்த 5 ரூபாய், 5 ரூபாயாகவே இருந்தது. இப்படியே 41 வருஷங்கள் 5 ரூபாய் வாங்கியதால், அப்பகுதி மக்கள் அவரை ஒரு கடவுளாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சுற்றுவட்டாரத்தில் 5 ரூபாய் டாக்டர் என்றாலே ஜெயச்சந்திரன் என்ற பேர் கிடைத்தது.
சமூக சேவை இயக்கம்
வெறும் கிளினிக்கோடு தன் வாழ்வை அமைத்து கொள்ளவில்லை இவர். ஏழை மக்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச மருத்துவ முகாமையும் நடத்தினார். 'நேதாஜி சமூக சேவை இயக்கம்' என்ற அமைப்பை ஆரம்பித்து கல்வி உதவித் தொகை, தெருவோர சிறுவர்களுக்கு உதவிகள் என தனது சேவையை விரிவுபடுத்தினார்.
உடல்நலக்குறைவு
அது மட்டும் இல்லை, குழந்தைகள் நலன், தாய்ப்பாலின் அவசியம் குறித்து பல நூல்களையும் எழுதினார். இவரது மனைவி, மகள், மகன் எல்லோருமே டாக்டர்கள்தான். இத்தனை சிறப்பையும் நன்மதிப்பையும் பெற்ற டாக்டர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 71.
கண்ணீர் அஞ்சலி
அவருடைய மரண செய்தியை கேட்டு வண்ணாரப்பேட்டை மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எத்தனையோ உயிரை பிழைக்க வைத்த டாக்டர் ஜெயச்சந்திரனின் உடலுக்கு நேரில் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி செல்கிறார்கள்.