எடப்பாடிக்கு எதிராகக் கிளம்பிய ‘வாழை’ முறைகேடு.. சேலத்தில் மட்டும் 500 கோடி?- அமைச்சர் பகீர் புகார்!
சென்னை : கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் வாழை விவசாயிகளுக்கு கடன் வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார் அமைச்சர் ஐ.பெரியசாமி.
வாழை விவசாயம் செய்யாதவர்களுக்கு வாழை விவசாயம் செய்ததாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 500 கோடி ரூபாய் சேலம் மாவட்டத்தில் மட்டும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தி வரும் நிலையில், ஈபிஎஸ் மீதான வாழை கடன் முறைகேடு புகார் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஏராளமான கடன் திட்டங்கள்! எண்ணற்ற புதிய அறிவிப்புகள்! கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை முழு விவரம்!
விவசாயிகளுக்கு கடன்கள்
கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "கடந்த ஆண்டு 14,84,052 விவசாயிகளுக்கு ரூ.10,292 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கூடுதலாக வழங்க வேண்டும் என்பதற்காக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 5,33,357 உறுப்பினர்களுக்கு, ரூ.4,054.24 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கோழி, ஆடு, மீன் வளர்ப்போருக்கு இதுவரை 1.25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.589 கோடி வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு பயிர்க்கடன்
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் 4000கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் என அடுத்த 3 மாதங்கள் அனைத்து பகுதிகளிலும விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவது தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 15 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2755 கோடி ரூபாய் கடன் தள்ளுபடிக்கான ரசீதை அனைவருக்கும் வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.1000 கோடி சொத்துகள் முடக்கம்
தமிழகத்தில் 780-க்கும் மேற்பட்டகூட்டுறவு சங்கங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் ரூ.1,000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடி இதுவரை 4900 கோடி வரை கொடுக்கப்பட்டுள்ள நிலையில், யார் பயனடையவில்லை என்பதை கண்டறிந்து, அவர்களும் பயனடையும்படியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் மாவட்டத்தில்
மேலும் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், சுமார் 50,000 விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டதாக கூறப்படுவதில் முறைகேடு நடந்துள்ளது. வாழை பயிர் செய்யாத விவசாயிகளுக்கு வாழை பயிரிட்டதாக கணக்கிட்டு தள்ளுபடி கொடுத்திருக்கிறார்கள். வாழை விவசாயமே செய்யாதவர்களுக்கும், நிலமே இல்லாதவர்களுக்கும் தள்ளுபடி செய்ததாக கணக்கு உள்ளது.
வாழை கடன் முறைகேடு
சோளம் பயிரிட்டால் ரூ.12,000 தான் கடன் வழங்கப்படும், வாழை பயிரிட்டால் 60 ஆயிரம் வழங்கப்படும். சோளம் பயிரிட்டவர்களுக்கு, அவர்கள் வாழை பயிரிட்டதாக கூறி பதிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் ரூ.500 கோடி அளவுக்கு இவ்வாறு முறைகேடுகள் நடந்துள்ளன. மற்ற மாவட்டங்களிலும் எந்த ஆவணங்களும் இல்லாமல் இப்படி முறைகேடாக கடன் வழங்கியுள்ளனர். அதற்காகவே இப்போது வழிமுறைகளை உருவாக்கி இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.