Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரண்டி பிடித்த பெண்கள் கையில் ‘கன்’ - 50 ஆண்டுகளுக்கு முன் மு.கருணாநிதி சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

காவல்துறையில் பெண்களைக் கொண்டுவர வேண்டும் எனத் தமிழ்நாடு 50 ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்திருக்கிறது என்றால் நாம் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்பதை யோசிக்க வேண்டும்.

 முதல்வர் ஸ்டாலின் செய்த சிறப்பு:

முதல்வர் ஸ்டாலின் செய்த சிறப்பு:

இந்த ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றம். ஆகவேதான், முதல்வர் ஸ்டாலின், இவ்விழாவில் உரையாற்றிய போது, "பொன்விழா எனச் சொல்லப்பட்டாலும், இது பெண் விழா" என்றார்.

மேலும் தொடர்ந்து அவர், "இங்கே கூடியுள்ள சிங்கப் பெண்களைப் போல் உட்கார்ந்திருக்கும் உங்களைப் பார்க்கும் போது இதைப் பார்க்கத் தந்தைப் பெரியார் இல்லையே? அண்ணா இல்லையே? கலைஞர் இல்லையே? என்ற ஏக்கம்தான் முதலில் என் மனதில் எழுந்தது. பெண்களின் கையிலிருந்த கரண்டியைப் பறித்து, புத்தகங்களைத் தந்தால் போதும் என்று சொன்னவர் பெரியார்.

படிக்க மட்டுமல்ல; அதிகாரம் மிக்க பொறுப்புக்கும் வரவேண்டும் என்று மனதார விரும்பியவர் அவர். ஆண்களைப் போலவே பெண்கள் 'கிராப்' வெட்டிக் கொள்ளவேண்டும். பேண்ட், சட்டை போட்டுக் கொள்ள வேண்டும் எனச் சொன்னவர் பெரியார். பெண்கள் மேடைகளில் முழங்கவேண்டும் என்று ஊக்கப்படுத்தியவர் அண்ணா.

பெண்கள் உயர்கல்வியைக் கற்று, வேலைகளுக்குச் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டவர் கலைஞர். பெண்களுக்குச் சொத்தில் உரிமை உண்டு என்பதைச் சட்டமாக்கியவர் அவர். இவர்தான் தமிழ்நாட்டு வரலாற்றில் பெண்களும் காவலர் ஆகலாம் என்று முதல்முதலாக உருவாக்கி, காக்கிச் சட்டை அணிய வைத்து பெண்களைக் கையில் துப்பாக்கியையும் ஏந்தவைத்தவர்.

இன்றைக்குத் தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 329 பெண்கள் காவலர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்றால், விதையை விதைத்தவர் கலைஞர்தான். 50 ஆண்டுக்கால பொன்விழாவைக் கொண்டாடும் இந்தநேரத்தில், தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்று பெண் காவலர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை நன்றி உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

மேற்கொண்டு முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 1973-ஆம் ஆண்டு கலைஞர் விதைத்த விதை. இன்று ஆல் போல் தழைத்து, பொன்விழா காண்கிறது.

முதலமைச்சராகத் தமிழ்நாட்டுக்கு எத்தனையோ 'முதல்' சாதனைகளைச் செய்தார்! தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்தார். பெண்கள் முன்னேற்றம் என்ற திராவிட இலக்கின் இன்னொரு அடையாளம் இந்தப் பொன்விழா" என்று தெரிவித்துள்ளார்.

 ராணுவத்தில் பெண்களுக்கு வேலை:

ராணுவத்தில் பெண்களுக்கு வேலை:

முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டதைப் போல 1929இல் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க மாநாட்டில், 'பெண்களை போலீஸ் மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் பணிக்குச் சேர்க்கவேண்டும்' என்ற தீர்மானத்தை நிறைவேற்றினார் பெரியார். அந்த கனவைத்தான் தனது ஆட்சிக்காலத்தில் 1973 ஆம் ஆண்டு நிறைவேற்றினார் மு.கருணாநிதி.

அப்போது தமிழ்நாடு காவல்துறையில் தலைவராகப் பதவி வகித்தவர் F. V. அருள். அப்போதுதான் ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒரு தலைமைக்காவலர், 21 பெண் காவலர்கள் கொண்ட பெண் போலீஸ் படையினை உருவாக்கினார் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி. அப்போது சப் இன்ஸ்பெக்டராக உஷா ராணி என்பவர் பணியில் அமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைக்குத் தமிழ்நாடு காவல்துறையின் பெண்கள் படையில் பணியாற்றியவர் சுமதி. இன்று ஓய்வு பெற்று சென்னையில் உள்ளார்.

 மு.கருணாநிதி செய்த அதிரடி மாற்றம்:

மு.கருணாநிதி செய்த அதிரடி மாற்றம்:

அன்று நடந்தவற்றை நமக்கு எடுத்துச் சொல்கிறார் அவர், "1973 ஆம் ஆண்டு ஒரு சப் இன்ஸ்பெக்டர், 21 பெண் காவலர்களை வேலைக்கு முதன்முதலாக எடுத்தனர். அப்போது சென்னை சேத்துப்பட்டில்தான் நாங்கள் கராத்தே, குதிரைப் பயிற்சி எடுத்தோம். ஒரு ஆண்டுக்காலம் வரை இந்தப் பயிற்சி நடைபெற்றது.

ஆறுமாத பயிற்சியின்போதே நாங்கள் மதுரையில் காவல்துறை சார்பாக நடந்த போட்டியிலும் கலந்து கொண்டோம். அது ஒரு சாதனை. இதுவரை பயிற்சிக் காலத்தில் போட்டிகளில் யாருமே பங்கேற்றதில்லை. அங்குப் போட்டியைப் பார்க்க வந்த கூட்டத்தில் பாதிப் பேர் எங்களைப் பார்க்கவே வந்திருந்தனர். காரணம், அதுவரை பெண் காவலர்களை மக்கள் பார்த்ததே இல்லை.

அது முடிந்ததும் சென்னை சிட்டி போலீஸில் எங்களுக்குப் போக்குவரத்து காவலர் பணி வழங்கப்பட்டது. குறிப்பாகப் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் காணாமல் சென்றால் மீட்பு போன்ற வேலைகளில் அதிகமாக ஈடுபட்டோம்.

அதன்பிறகு 1975இல் சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்புப் பணியில் பெண்கள் இல்லை என்ற காரணத்தால், அங்கு 10 பேரைப் பணி மாற்றம் செய்தனர். அதில் நானும் ஒருவள். 1981ஆம் ஆண்டு தலைமைக் காவலராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றி பின் ஓய்வு பெற்றேன்" என்கிறார்.

1974 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பெண் போலீஸ் படையைச் சேர்ந்த உஷா ராணி, கையில் வாள் ஏந்தியபடி பெண் போலீஸ் படையை வழிநடத்திச் சென்ற பேரணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அருள், "ஒரு அரங்கை ஒளி விளக்குகள் பிரகாசிக்கச் செய்வதைப் போல் இந்தப் பெண் காவலர்கள் நம் காவல்துறையை ஒளிரச் செய்வார்கள்" என்று பேசினார்.

இதன்பின்னர் காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கைப் படிப்படியாக உயர்த்தப்பட்டது. மீண்டும் 1989 ஆம் ஆண்டு மு.கருணாநிதி ஆட்சியில் அனைத்து அரசுப் பதவிகளிலும் 30% பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை அடுத்து காவல்துறையில் பெண்கள் பலம் கூடியது.

 மற்ற மாநிலங்கள் மக்கள் ஆச்சரியம்:

மற்ற மாநிலங்கள் மக்கள் ஆச்சரியம்:

இது ஒரு வரலாற்றுச் சாதனை. இதனைக்குறித்து சென்னை தலைமைக் காவல் இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, "அந்த 30% இடஒதுக்கீடு முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. இன்றைக்கு இன்வெஸ்டிகேஷன், போக்குவரத்து காவல்துறை, சட்டம் ஒழுங்கு, சிபிசிஐடியில் கூட பெண்கள் நிறையப் பேர் பணியில் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இதில் சிறப்பு என்னவென்றால், எல்லா யூனிட் ஹெட்டும் பெண்களாகவே உள்ளனர். அது பெரிய பெருமை.

இந்தியாவிலேயே தமிழ்நாடு காவல்துறை பெஸ்ட். இங்கே ஒட்டுமொத்தமாக 222 மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. சென்னையில் மட்டும் 34 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களுக்குச் சென்று இதைச் சொல்லும் போது அவர்கள் மிக ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள். பெண் காவல்துறையைப் பொறுத்தவரை ஒரு முன்னேறிய மாநிலமாகத் தமிழ்நாட்டைப் பார்க்கிறார்கள்.

மற்ற மாநிலங்களில் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் பெண்கள் தரும் புகார்களின் எண்ணிக்கை அதிகமாக ஏன் உள்ளது எனக் கேட்பார்கள். தமிழ்நாட்டுப் பெண்கள் தங்களின் உரிமையை நிலைநாட்டக் காவல்நிலையம் வருவதற்குத் தயங்குவதில்லை. காரணம் அவர்களின் படிப்பறிவு. நல்ல விழிப்புணர்வு இருக்கிறது.

ஆனால் பிறமாநிலங்களில் பெண்கள் தரும் புகார்கள் குறைவு. காரணம், அவர்கள் காவல்நிலையம் வரவே தயங்குகிறார்கள். அச்சுறுத்தல் வேறு அதிகமாக உள்ளது. தமிழ்நாடு அப்படியில்லை" என்கிறார்.

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் வரவேற்பாளர்களாகப் பெண் காவலர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். புகார் தரும் பொதுமக்களிடம் அமைதியாகப் பேசி, அவர்களின் குறைகளை உயர் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற மனிதாபிமானம் அடிப்படையிலேயே பெண்களை நியமித்துள்ளது அரசு.

 இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னோடி:

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னோடி:

வடசென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி, "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் பெண் காவலர்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள். இது நமக்கான பெருமை. இந்தப் பொன்விழா தருணத்தில் முதல்வர் ஸ்டாலின் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளார்.

காலையில் 7 மணிக்கு இருந்த ரோல் கால் முறையைக் காலை 8 மணிக்கு மாற்றி உள்ளார். இது மாபெரும் உதவி. பெண் காவலர்களைப் பொறுத்தவரை வீட்டுச் சுமை அதிகம். பெண் காவலர்கள் வீட்டையும் பார்க்க வேண்டும். நாட்டையும் பார்க்க வேண்டும். ஆகவே இந்தக் கால அளவை மாற்றி அளித்த முதல்வருக்கு நன்றி" என்கிறார்

 அதிரடியான திட்டம் ‘அவள்’:

அதிரடியான திட்டம் ‘அவள்’:

இந்தப் பொன்விழாவில்தான் 'அவள்' திட்டத்தினை (AVAL - Avoid Violence Through Awareness and learning) ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதன் மூலம் பொதுமக்களாகிய பெண்கள் தங்களின் அவசரத் தேவைக்கு எந்நேரத்திலும் உதவிக்கு அழைக்கலாம்.

மேலும் காவல்துறை சார்ந்த ஒன்பது புதிய திட்டங்களையும் முதல்வர் அறிவித்துள்ளார். கூடுதலாக மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு சிறப்புத் தபால் உறையையும் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+