3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.. டேட்டா வெளியிட்ட தமிழக அரசு!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 60,567 நபர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: சென்னையில் கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாட்டில் இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மாதம் வரை 60,567 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விவரத்தை முதல்வர் குறிப்பிட்டார். இது குறித்து சில ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுக்கு பின்வரும் விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றது.

டி.என்.பி.எஸ்.சி, ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட முகமைகள் மூலம் 27,858 பேருக்கும், பல்வேறு அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32,709 பேருக்கும், அரசு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் நீதித்துறையில் 5,981 பேருக்கும் பள்ளிக் கல்வித்துறையில் 1,847 பேருக்கும், வருவாய் துறையில் 2,996 பேருக்கும், ஊரக வளர்ச்சித் துறையில் 857 பேருக்கும் உயர்கல்வித்துறையில் 1,300 பேருக்கும் சுகாதாரத்துறையில் 4.286 பேருக்கும் அரசு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூகநலம் உள்ளிட்ட 15,442 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.
ஆக மொத்தம், இந்த அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்திற்குள் (27,858 + 32,709) 60,567 நபர்களுக்கு அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்களுக்கு பல்லாயிரக் கணக்கில் வேலை வாய்ப்பினை உருவாக்கிட உலக முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக நம் மாநிலத்தின் இளைஞர்களுக்கு இந்தியா மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வாய்ப்புகளை உருவாக்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேரும், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேரும், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய உதவி பொறியாளர்(கட்டடவியல்) உள்ளிட்ட பதவிகளுக்கு 752 பேர், உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1,253 பேர் தேர்வு செய்யயப்பட்டுள்ளதாக அண்மையில் டிஎன்பிஎஸ்சி தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications