பக்கா ஸ்கெட்ச்.. அதிமுகவிலிருந்து கொத்தாக திமுகவிற்கு தாவிய 7 ஒன்றிய கவுன்சிலர்கள்
சென்னை: கடலூர் மாவட்டத்தில் இருந்த ஏழு அதிமுக கவுன்சிலர்கள் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்து உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியின் போட்டியின்றி தேர்வான அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட வாரியாக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என கட்சி அமைப்பில் நான்காக பிரிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் டிசம்பர் 22,23ம் தேதிகளில் உட்கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடக்கும் என தகவல் வெளியானது.

அதிமுகவில் மோதல்
குறிப்பிட்ட நாளில் தேர்தலின் போது அதிமுக நிர்வாகிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது . அனைத்து வார்டுகளிலும் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவேண்டும் , பழைய நிர்வாகிகளுக்கு பதவிகள் வழங்கக்கூடாது என ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். திடீர் பிரச்சனைகளைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கார் கண்ணாடிகள் உடைப்பு
வாக்குவாதம் முற்றியதில் திடீரென அது கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதன் காரணமாக கடலூர் திருவந்திபுரம் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதோடு கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதன் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திமுகவுக்கு தாவல்
கடலூரில் அதிமுகவில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் தான் கடலூர் மாவட்டத்தைச் ஏழு அதிமுக கவுன்சிலர்கள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

அதிமுகவில் நல்லது செய்ய முடியவில்லை
திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கள் பகுதி மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் இருந்ததாகவும் , ஆளுங்கட்சியாக இருந்த போதே தங்களுக்கு எவ்வித உதவியும் அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் செய்யப்படவில்லை எனக் கூறினார். இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் திமுகவில் இணைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications