700 பொது சுகாதாரத் துறை பணியாளர்கள் ஒரே நாளில் நீக்கம்.. மீண்டும் சேர்க்க கோரிக்கை
Recommended Video

சென்னை: தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த 700க்கும் மேற்பட்ட ஆய்வக நுட்பனர்கள் ஒரே நாளில் பணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கக் கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பொது சுகாதார துறையில் நடமாடும் மருத்துவக்குழு மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெளி ஆதார முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆய்வக நுட்பனர்கள் பணியாற்றி வந்தனர்.

தற்போது MRB - மூலமாக ஆய்வக நுட்பனர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக கூறி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 700 - க்கும் மேற்பட்ட ஆய்வக நுட்பனர்கள் 26.10.2018 அன்று ஒரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

டெங்கு, பன்றிக்காய்ச்சலால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் 700 ஆய்வக நுட்பனர்களின் பணிநீக்கத்தால் பணியாளர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 700 - க்கும் மேற்பட்ட ஆய்வக நுட்பனர்கள் ஒன்றாக சேர்ந்து மீண்டும் பணிவழங்கிட வேண்டி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநரை நேரில் சந்தித்து சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் நீக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளதாக சங்க மாநிலத் தலைவர் என். ராஜ துரை தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான காய்ச்சல் பரவி வருகிறது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வட கிழக்குப் பருவ மழையும் தொடங்கப் போகிறது. எனவே இந்த நெருக்கடியான நேரத்தில் பணி நீக்கம் என்பது பொது சுகாதாரத் துறையின் முக்கியப் பணிகளை பாதிக்கும் வகையிலேயே இருக்கும் என்பதால் நீக்கல் நடவடிக்கையை அரசு மறு பரிசீலனை செய்யலாம் என்பதே மக்களின் கோரிக்கையும் ஆகும்.














Click it and Unblock the Notifications