ஓ.பன்னீர் செல்வத்திடம் 78 கேள்விகள்... 4 மணி நேரம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை - நாளையும் தொடரும்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜரான ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி தர்மயுத்தம் தொடங்கியவரே ஓ.பன்னீர் செல்வம்தான். அவர் எழுப்பிய சந்தேகத்தின் பேரிலேயே ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைச்சர்கள், எம்பிக்கள், அப்போலோ டாக்டர் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
ஜெயலலிதாவின் உடல்நலத்தில் இருந்த பிரச்சினை பற்றி அப்பல்லோ மருத்துவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விளக்கம் அளித்தனர். இன்றைய தினம் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியிடம் காலை 10 மணிக்கு ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது.

ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்
ஆஜராகக் கூறி எட்டுமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்த ஓ.பன்னீர் செல்வம், இன்று முதல்முறையாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் காலை முதலே பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில் பல கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் அளித்தார். சில கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

என்ன நடந்தது என்று தெரியாது
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளன்று என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் தெரியாது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரமும் தெரியாது. சொந்த ஊரில் இருந்த போதுதான், ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அறிந்துகொண்டேன் என்று பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்.

வெளிநாடு சிகிச்சை
மதியம் மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 35 நாட்களில் அண்ணா, எம்.ஜி.ஆர். போல ஜெயலலிதாவையும் வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் சொன்னேன்.அப்போலோ மருத்துவர்களிடம் பேசிய பிறகு வெளிநாடு செல்வது குறித்து முடிவெடுக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கையெழுத்து போட்டிருப்பேன்
ஜெயலலிதா வெளிநாடு அழைத்துச் செல்வது தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் எதுவும் கூறவில்லை. வெளிநாடு அழைத்துச் செல்வது பற்றி ராமமோகன்ராவ் தன்னிடம் பேசவில்லை. கேட்டு இருந்தால் கையெழுத்து போட்டிருப்பேன்.ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் ஒரு வாரத்தில் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர் விஜயகுமார் கூறினார்.

சிசிடிவி கேமராவை அகற்றச்சொன்னது யார்
அப்போலோ மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்ற தான் கூறவில்லை என்று விளக்கமளித்தார். மேலும், தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆனது வரை தான் பேசியது அனைத்தும் சரியானதே என்றும் அவர் தெரிவித்தார். ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சிகிச்சை அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எனக்கு தெரியாது என்று கூறினார்.

நாளை ஆஜராக உத்தரவு
காலையிலிருந்து நடைபெற்ற விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திடம் ஆணையம் சார்பாக வழக்கறிஞர் 78 கேள்விகளை கேட்டுள்ளார். ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications