சிசிடிவி.. ரெட்டி.. மெட்ரோ! ஓ பன்னீர்செல்வம் பற்ற வைத்த 8 வெடிகள்.. ஜெ மரண விசாரணையில் நடப்பது என்ன?
சென்னை: ஜெயலலிதா மரண விசாரணையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் 8 முக்கியமான வாக்குமூலங்களை அளித்துள்ளார்.
Recommended Video
மறைநத முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் தொடக்கத்தில் ஓ பன்னீர்செல்வம் ஆஜர் ஆவதை தவிர்த்து வந்தார்.
8 முறை இவரை விசாரணைக்கு ஆணையம் அழைத்த நிலையில் நேற்று ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜர் ஆனார். இந்த விசாரணையில் ஓ பன்னீர்செல்வம் 8 முக்கியமான வாக்குமூலங்களை அளித்துள்ளார். ஜெயலலிதா மரணத்தில் நிலவும் மர்மம் தொடர்பாக பல்வேறு விவாதங்களை இந்த வாக்குமூலங்கள் எழுப்பி உள்ளன.

வாக்குமூலம் 1 - நேரில் பார்க்கவில்லை
ஓ பன்னீர்செல்வம் கொடுத்த முதல் பரபரப்பு வாக்குமூலம், தான் ஜெயலலிதாவை சந்திக்கவில்லை.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய தினம் அவரை பார்த்தேன். மெட்ரோ திறப்பு விழாவில் சந்தித்தேன். மறுநாள் செப்டம்பர் 22, 2016 அன்று மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சேர்த்த பின் நான் அவரை சந்திக்கவே இல்லை. நான் சொந்த ஊரில் இருந்த போது அதை பற்றி எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று வாக்குமூலம் கொடுத்தார்.

வாக்குமூலம் 2 - தேர்தல் கையெழுத்து
இரண்டாவது முக்கியமான வாக்குமூலம் ஜெயலலிதாவின் கைரேகை. திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலில் ஜெயலலிதா கைரேகை போட்டது உண்மைதான். அது எனக்கு தெரியும் என்று ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா மரணம் காரணமாக அவர் சுயநினைவோடுதான் வேட்பாளர்கள் தேர்விற்கு ஒப்புதல் அளித்தாரா என்ற கேள்வி நிலவி வந்தது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா கைரேகை போட்டது உண்மைதான் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலம் 3 - சிகிச்சை பற்றி தெரியாது
அதே சமயம் ஜெயலலிதாவிற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பற்றி தெரியாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். ஜெயலலிதாவிற்கு உடலில் என்ன பிரச்சனை, நோய் இருந்தது என்று எனக்கு தெரியாது. அவருக்கு சர்க்கரை அதிகமாக இருந்தது மட்டும் எனக்கு தெரியும் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டார். அதோடு இவரிடம் சிகிச்சை பற்றிய கேள்விகள் எதையும் கேட்க கூடாது என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வாக்குமூலம் 4 - நேரில் பார்த்தேன்
நேற்று ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று கூறிய ஓபிஎஸ் இன்று பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், நான் உட்பட 3 அமைச்சர்கள் ஜெயலலிதாவை அவரின் மரணத்திற்கு முன்பாக சந்தித்ததாக அவர் தனது வாக்குமூலம் அளித்துள்ளார். ஜெயலலிதாவிற்கு எக்மோ கருவி நீக்கப்பட்ட முன்பாக, டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைவிற்கு முன்பாக அவரை பார்த்ததாக ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குமூலம் 5 - சசிகலா சொன்னார்
அதோடு சசிகலாதான் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அப்டேட்களை தனக்கு வழங்கியதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்கு இருந்த போது அவர் நன்றாக இருப்பதாக சசிகலாதான் என்னிடம் கூறினார். ஜெயலலிதா உடல்நிலை பற்றி என்னிடம் தெரிவித்து வந்தார்.ஆனால் ஆட்சி நிர்வாகம் ரீதியாக சசிகலா என்னிடம் எதுவும் கூறவில்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

வாக்குமூலம் 6 - வெளிநாடு போகலாம்
அதோடு ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது சரியாக 35வது நாளில் அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிப்பது பற்றி பேசியதாக ஓபிஎஸ் கூறியுள்ளார். இதை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரிடம் பேசினேன். ஆனால் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதா ஒரு வாரத்தில் குணமடைய வாய்ப்பு உள்ளதாக அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி மருமகன் விஜயகுமார் ரெட்டி என்னிடம் தெரிவித்தார் என்று ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

வாக்குமூலம் 7 - சிசிடிவி
இதில் இன்னொரு முக்கியமான வாக்குமூலம் அப்போலோ சிசிடிவி. ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் இருந்த சிசிடிவி அகற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி நிலவி வருகிறது. ஆனால் இந்த சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை. அதற்கும் தனக்கு தொடர்பு இல்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா என்ன சாப்பிட்டார் என்பது போன்ற விவரங்கள் எதுவும் தனக்கு தெரியாது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

வாக்குமூலம் 8 - சந்தேகம் இல்லை
இதில் சமீபத்தில் கொடுத்த வாக்குமூலம்தான் முக்கியமானது. அதில், ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் எதுவும் இல்லை. தனிப்பட்ட முறையில் நான் சந்தேகம் அடையவில்லை. பொதுமக்களிடயே கருத்து வலுத்ததால்
மட்டுமே நான் அதை பற்றி விசாரிக்க கோரிக்கை விடுத்தேன். சசிகலாவை நான் தனிப்பட்ட முறையில் மதிக்கிறேன் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications