அடி தூள்! நெரிசல் இல்லாம சொந்த ஊருக்கு பயணிக்கலாம்.. பக்ரீத் பண்டிகையை ஒட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்!
சென்னை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பக்ரீத் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, இஸ்லாமிய பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாட வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை (ஜூன் 28) அன்று சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு நாளை (28-6-2023) தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து மேலும் 400 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
அதாவது, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 800 சிறப்பு பேருந்துகள் பக்ரீத்தை முன்னிட்டு இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆகவே தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணித்திட, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்திக்கொண்டு சிரமம் இன்றி தங்களது பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நாடு முழுவதும் ஸ்பெஷல் ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை சென்ட்ரலிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் நாளை புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications