இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேருக்கு கொரோனா.. ஓமிக்ரான் பாதிப்பா என ஆய்வு
சென்னை: ஓமிக்ரான் கொரோனா குறித்து அச்சம் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ.25ஆம் தேதி புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா தீவிர பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என அஞ்சப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பு இதைக் கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் ஓமிக்ரான் பரவலைத் தடுக்க தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

ஓமிக்ரான் கொரோனா
இருப்பினும் இந்த கொரோனா மின்னல் வேகத்தில் உலகெங்கும் பரவி வருகிறது. வெறும் சில நாட்களில் இந்தியா, அமெரிக்கா உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்க ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது, உலக சுகாதார அமைப்பும் கூட சர்வதேச விமான தடை பெரியளவில் பயன் தராது என்றும் வேக்சின் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்றுமே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பயணக் கட்டுப்பாடுகள்
இந்தியாவிலும் சில பயணக் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளை ஆபத்தான நாடுகளாக இந்தியா பட்டியலிட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 15 நாட்கள் தனிமையும் 2 முறை கொரோனா பரிசோதனையும் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதர நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சுயதனிமையும் ரேண்டம் கொரோனா பரிசோதனையும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது,

சர்வதேச விமான நிலையங்கள்
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்குத் தீவிர கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நேற்று வரை 7 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. கொரோனா உறுதி செய்யப்பட்ட வெளிநாட்டுப் பயணிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இருவருக்கு கொரோனா
இந்தச் சூழலில் இன்றைய தினம் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஒருவருக்கும், சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த 67 வயதான ஒருவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் பயணித்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் யாருக்கும் கொரோனா கண்டறியப்படவில்லை எனச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Recommended Video

9 பேருக்கு கொரோனா
இதன் மூலம் தமிழ்நாட்டில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து இவர்களுக்கு என்ன மாதிரியான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய அவர்களின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications