BIG NEWS: நாட்டிலேயே அதிகமாக.. தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்.. தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை 6.41 கோடியில் இருந்து 5.43 கோடியாக சரிந்துள்ளது என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ‛சார்' எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர நடவடிக்கை கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கியது. இந்த பணிகள் இந்த மாதம் 4ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தேதி நீட்டிப்பு செய்யப்பட்டது.

அதன்படி ‛சார்' விண்ணப்ப படிவங்களை பூர்த்தியிட்டு டிசம்பர் 14ம் தேதி வரை வழங்க காலஅவகாசம் வழங்கப்பட்டது.இதையடுத்து இன்று மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலமாக மாநிலம் முழுவதும் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 15.18 சதவீதம் ஆகும்.
குறிப்பாக இறந்தவர்கள் என்று 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை பெற்றவர்கள் என்று 3 லட்சத்து 39 ஆயிரத்து 278 பேரின் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் என்று 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு முன்பாக மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 என்ற அளவில் உள்ளது.
இதில் பெண் வாக்காளர்கள் 2 கோடியே 77 லட்சத்து 60 ஆயிரத்து 332 பேர் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 66 லட்சத்து 63 ஆயிரத்து 233 பேர் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களாக 7,191 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்களாக 4.19 லட்சம் பேர் உள்ளனர்'' என்றார். இதன்மூலம் நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் வழியாக பீகாரில் 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருந்தனர். மேற்கு வங்காளத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. ராஜஸ்தான் மாநிலத்தில் 42 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. கோவாவில் 10 லட்சம் பெயர்களும், . புதுச்சேரியில் 1 லட்சம் பெயர்களும், லட்சத்தீவில் 1,500 பெயர்களும் நீக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications