சென்னையில் அதிர்ச்சி.. மருத்துவ மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை.. இளைஞர் மீது போலீஸ் ஆக்சன்
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் மருத்துவ மாணவி ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அந்த மாணவர் மீது 4 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, பாலியல் சீண்டல், பாலியல் வன்கொடுமை போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண்கள் மட்டுமல்லாமல் பள்ளிச் சிறுமிகள், கல்லூரி மாணவிகள் என குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை ஒவ்வொரு நாளும் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகள், அண்ணா பல்கலை மாணவி மீதான பாலியல் வன்கொடுமை என வீடு, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம், பொது இடங்கள் என எந்தவொரு பகுதியும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருகிறது.
இந்நிலையில், சென்னையில் பல் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த 26 வயதான மாணவிக்கு, அதே கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவர் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு தொடர் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாலியல் தொல்லை அளித்த அதே பல் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர் மீது காவல் துறையினர், பாலியல் துன்புறுத்தல், பெண்ணை அவமதிக்கும் செயலில் ஈடுபடுதல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அந்த மாணவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட கல்லூரிக்குள் வைத்தே மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாணவர் தலைமறைவாகியுள்ளார். காவல் துறையினர் தீவிரமாக மாணவரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications