தங்க நகை சீட்டு, உல்லாச வாழ்க்கை.. யார் அந்த சென்னை கல்லூரி மாணவி.. வாயடைத்து போன வயதான தம்பதி
சென்னை: சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் 75 வயதாகும் கலாவதி என்ற ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தன்னையும், தனது கணவரையும் கவனித்துக்கொள்ள நான் வேலைபார்த்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை வீட்டில் வேலைக்கு அமர்த்தினோம். மகளை போல் பழகி தன்னிடமும், தனது கணவரிடமும் ரூ.10 லட்சம் மோசடி செய்துவிட்டார்.. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்..
சென்னையில் இன்றைக்கு பணம், வசதி, அந்தஸ்து, கௌரவம் என எல்லாம் இருந்தாலும், வயதான பெற்றோருக்கு ஆறுதலாக பேசவும், பாசமாக கவனித்துக் கொள்ளவும் பிள்ளைகள் அருகில் இருப்பது இல்லை.. அவர்களது பிள்ளைகள் அமெரிக்காவிலோ, லண்டனிலோ, ஐரோப்பாவிலோ செட்டில் ஆகி இருப்பார்கள்.

மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வசிக்கும் வயதான பெற்றோரின் பிள்ளைகள், சென்னையிலோ, பெங்களூரிலோ அல்லது கோவையிலோ செட்டில் ஆகி இருப்பார்கள். கவனிக்க ஆள் இல்லாமல் அவர்கள் அனுப்பும் பணத்தை வாங்கிக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
இதனிடையே சென்னையில் உள்ள வசதியான வயதான தம்பதிகள், அருகில் இருந்து யாரும் கவனிக்காததால் ஏக்கத்தில் தவிக்கும் நிலையில், தங்களை கவனித்துக் கொள்ள வேலைக்கு பெண்களை நியமிக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல ஊதியமும் வழங்குகிறார்கள்.. அப்படி நியமிக்கப்படும் பெண்கள், வயதானவர்களை கவனிப்பது போல் நடித்து மோசடி செய்யும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. அப்படித்தான் ஒரு கல்லூரி மாணவி, சென்னையில் வயதான தம்பதியிடம் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் 75 வயதாகும் கலாவதி என்பவர் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறுகையில், " சென்னையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி நான் ஓய்வு பெற்று விட்டேன். என்னுடைய கணவர் மணியுடன் (80) நான் தனியாக வாழ்ந்து வருகிறேன். எனது மகன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். என்னையும், என் கணவரையும் கவனித்துக் கொள்ள நான் வேலை பார்த்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை வீட்டில் வேலைக்கு அமர்த்தினேன்.
அந்த மாணவியும் எங்களுடன் தங்கி இருந்து, எங்களை நன்றாக பார்த்துக் கொண்டார். எங்கள் வீட்டிலேயே சாப்பிடுவார். அவருக்கு மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளமாக கொடுத்து வந்தேன். அவரை வேலைக்காரியாக பார்க்காமல் சொந்த மகளை போன்று நாங்கள் பார்த்துக் கொண்டோம். எனது கணவரின் வங்கி கணக்குகளையும் அந்த மாணவியே பார்த்து வந்தார்.. திடீரென்று எனது கணவர் இறந்துவிட்டார். எனது மகனும் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்திருந்தார். எனது கணவரின் வங்கி கணக்குகளை மகன் சரி பார்த்தபோது பணம் மிகவும் குறைவாக இருந்தது.
எனது கணவரின் வங்கி கணக்கில் இருந்து அவ்வப்போது பணம் எடுக்கப்பட்டிருந்தது. ரூ.10 லட்சம் வரை எனது கணவரின் வங்கி கணக்கில் இருந்து எடுத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறது. என்னுடன் தங்கியிருந்த கல்லூரி மாணவியே இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார். இந்த புகார் மனு மீது கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினார்கள். குறிப்பிட்ட கல்லூரி மாணவியிடமும் விசாரணை நடத்தினார்கள்..
விசாரணையில் அந்த கல்லூரி மாணவி நகைக்கடை ஒன்றில் மாதந்தோறும் ரூ.25 ஆயிரம் வீதம் நகைச்சீட்டு கட்டி வந்துள்ளாராம். வங்கியில் எடுத்த பணத்தில் இருந்து அந்த ரூ.25 ஆயிரம் பணத்தை கட்டினாராம். பின்னர் அடிக்கடி எடுத்த பணத்தை ஆடம்பரமாக செலவழித்தேன் என்றும் கூறினாராம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications