இதெல்லாம் சரியில்லீங்க... அதிமுக வழிகாட்டுதல் குழுவில் ஜாதி நீதியும் இல்லை.. சமூக நீதியும் காணோமே!!
சென்னை: அதிமுக உருவாக்கியுள்ள வழிகாட்டுதல் குழுவில் ஜாதிய நியாயமும் இல்லை... சமூக நீதியும் காணலை என்கிற புலம்பல்கள் எழத் தொடங்கி உள்ளன.
அதிமுகவில் முடிவுகளை எடுக்க 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த 11 பேர் குழுவில் ஓபிஎஸ் அணியின் பேரும் ஈபிஎஸ் அணியின் 6 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
அத்துடன் இங்கே பிரச்சனை முடியவில்லை. ஜாதிய அடிப்படையில்தான் இந்த குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியானால் எங்களுக்கு எல்லாம் இடம் கிடையாதா? என்கிற பொங்கல் சப்தங்கள் ஓவராக கேட்கிறது.

எந்த ஜாதி? யார் பிரதிநிதி?
11 பேர் கொண்ட குழுவில் முக்குலத்தோர் பிரதிநிதிகளாக திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ் உள்ளனர். கொங்கு வேளாள கவுண்டர்கள் சார்பாக தங்கமணி, வேலுமணிக்கு இடம். வன்னியர் பிரதிநிதியாக சிவி சண்முகம், மீனவர் சமூகத்துக்கு ஜெயக்குமார்... நாயுடு (கிறிஸ்தவ) சமூகத்துக்கு பிரபாகரன், நாடார் சமூகத்துக்கு மனோஜ் பாண்டியன், தேவேந்திர குலவேளாளர் சார்பாக சோழவந்தான் மாணிக்கம் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

தலித்துகளுக்கு இடம் இல்லை?
அதெல்லாம் சரிங்க.. தலித்துகளுக்கான பிரதிநிதி யார்? என்கிற ஒரு கேள்வி எழுந்துள்ளது. அப்படியானால் அதிமுக என்ன ஆதிக்கசாதிகளின் கட்சியா? என்கிற குமுறலும் கொட்டப்படுகிறது. இதன் உச்சமாக ஏங்க பெண்கள் ஒருவரை கூட நியமிக்கலையே என்கிற ஆதங்கமும் வெளிப்படுகிறது.

ஜெ. கட்சியில் பெண்களுக்கு இடம் இல்லையா?
இத்தனைக்கும் எம்ஜிஆருக்குப் பிறகு இந்த கட்சியை கட்டி காப்பாத்தி சிந்தாம சிதறாம ஒப்படைச்சவரு ஜெயலலிதா.. அவரோட கட்சியில் ஒரே ஒரு பெண்ணுக்கு கூடவா வழிகாட்டுதல் குழுவில் இடம்கிடைக்க தகுதி இல்லாம போச்சா? அதேபோல் இஸ்லாமியருக்கான பிரதிநிதித்துவம் இல்லையே ஏன்? என்றும் கேட்கப்படுகிறது.

மாற்றி அமைக்க கோரிக்கை
ஏன் 11 பேர் கொண்ட குழுவைத்தான் அமைக்கனுமா? எல்லா ஜாதியினர், சமூகத்தினர் இடம்பெறும் வகையிலான குழுவை அமைத்தால் பஞ்சாயத்தை கூட்டி ஊரைவிட்டு ஒதுக்கியா வெச்சிடுவாங்க? என்னங்க இதெல்லாம் சரியில்லீங்க.. என ஏகத்துக்கும் ஒவ்வொரு சமூகமும் கோபக்கனலை கொட்டி வருகிறது. இதை எப்படி சமாளிப்பாங்களோ?












Click it and Unblock the Notifications