சென்னை வெள்ளத்தில் நீச்சல் அடித்து உயிர் தப்பி சொந்த ஊர் போன தம்பதி.. திரும்பி வந்து பார்த்தால் ஷாக்
சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் 2 ஆள் உயரத்திற்கு தண்ணீர் தேங்கிய நிலையில், வெள்ளத்தில் நீச்சல் அடித்து உயிர் தப்பி சொந்த ஊர் சென்ற தம்பதி, தற்போது வீடு திரும்பி வந்து பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் மொத்த வீடும் சிதைந்து போனதுடன், வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாமே வீணாய் போய் இருக்கிறது.
சென்னை பள்ளிக்கரணையில் ஏற்பட்ட வெள்ளம் அசாதாரணமானது.. பல்லாவரம் சிட்லபாக்கம் ஏரி, கீழ்கட்டளை நன்மங்கலம் ஏரி நிறைந்தால் நேரடியாக பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்குத்தான் தண்ணீர் வரும். இந்த ஏரி மழைக்கு முன்பே நிறையும் நிலையில் தான் இருந்தது. இந்த ஏரி தண்ணீர் நிறைந்தால், பல்லாவரம் துரைப்பாக்கம் சாலையான 200 அடி சாலை உடனடியாக வெள்ளத்தில் சிக்கும்.

அதேபோல் பள்ளிக்கரணை ஏரியை ஒட்டிய ராம்நகர் தெற்கு பகுதிகள், கைவேலி, பள்ளிக்கரணை பாலாஜி நகர், எல்ஐசி நகர், பள்ளிக்கரணை வேளச்சேரி சாலை ஆகியவையும் வெள்ளத்தில் சிக்கும் மேலும், பள்ளிக்கரணை நகரம் முழுவதுமே வெள்ளத்தில் சிக்கும். இந்த ஏரி நீர் பள்ளிக்கரணை ஏரியில் கலக்க காமாட்சி மருத்துவமனை அருகில் உள்ள வழி தான் பிரதானமாக உள்ளது. அதேநேரம் சாலையில் அந்த பக்கம் உள்ள ஏரியின் நீர் அப்படியே ஊருக்குள் போய் வெளியேறும் நிலையே பெரும்பாலும் ஏற்படுகிறது.
அப்படித்தான் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் அன்று பெய்த தொடர் பேய் மழையால் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரிக்கு அதிகப்படியான தண்ணீர் வந்தது. இதனால் பள்ளிக்கரணை வெள்ளத்தில் மூழ்கியது. சில இடங்களில் 6 அடி முதல் 10 அடி வரை தண்ணீர் தேங்கியது. இதில் நாராயணபுரம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டதால் காரப்பாக்கம் உள்ளிட்ட ஓஎம்ஆர் பகுதிகளும் இடுப்பளவு தண்ணீரில் சிக்கியது.
இந்த சூழலில் சென்னை பள்ளிக்கரணை வள்ளல் பாரி நகரில் 2 ஆள் உயரத்திற்கு தண்ணீர் தேங்கிய நிலையில், வெள்ளத்தில் நீச்சல் அடித்து உயிர் தப்பி சொந்த ஊர் சென்ற தம்பதி, தற்போது வீடு திரும்பி வந்து பார்த்த போது பல லட்சம் மதிப்பு உள்ள பொருட்கள் வீணாய் போய் இருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று மின்சாரம், தொலைத்தொடர்பு முடங்கிப்போன நிலையில், பலரது வீட்டை வெள்ள நீர் ஆக்கிரமித்தது.
இதையடுத்து உயிர் பிழைத்தால் போதும் பள்ளிக்கரணை வள்ளல் பாரி நகரில் வசிக்கும் மருந்து விற்பனை பிரதிநிதி சிலம்பரசன் மற்றும் அவரது மனைவி துர்கா ஆகியோர் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வெள்ள நீரில் நீச்சல் அடித்தும் நீந்தியும் தப்பி உள்ளனர். அதன்பின்னர் அவர்கள் பேருந்து மூலம் ஊர் திரும்பினர்..
இதுபற்றி ஊடகத்திற்கு பேட்டி அளித்த சிலம்பரசன், 3 நாட்களாக மழையில் மாட்டிக் கொண்டோம்.. செல்போனில் சார்ஜ் இல்லை. மின்சாரமும் இல்லை. காப்பாற்ற யாரும் வரவில்லை.. தன்னார்வலர்கள் தான் சாப்பாடு கொடுத்தார்கள்.. ஊருக்கு போய்விட்டு வந்து பார்த்தோம்... வீட்டில் எல்லா பொருளுமே போய்விட்டது. இனி என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை.. 10 லட்சம் வரை போய்விட்டது என்றார். இதனிடையே சென்னை மக்களுக்கு அரசு வெள்ளநிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications