ரேபிட் டெஸ்ட் கிட் விவகாரம்... கேள்விகணைகள் வீசும் எதிர்க்கட்சிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
சென்னை: தமிழக அரசு சீன நிறுவனத்திடம் கொள்முதல் செய்த ரேபிட் டெஸ்ட் கிட் விவகாரம் இப்போது பூதாகரமாகி சுகாதாரத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதை கோட்டையில் உள்ள ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ரசித்து வருகிறார்கள்.
குறிப்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தலைமைச்செயலாளர் சண்முகம் ஆகியோருடன் கருத்து முரண்பாடுடைய பல அதிகாரிகள் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து என்ன நடக்கக்கூடும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஆனால் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத, நிர்வாகத் திறமைக்கு பெயர் பெற்ற உமாநாத் ஐ.ஏ.எஸ் இதில் சிக்கிக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களின் கண்டனத்திற்கு ஆளாகியிருப்பது தான் பரிதாபத்திற்குரியது.
கர்நாடகத்தில்.. மேலும் 11 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 523 பேராக உயர்வு.. இதுவரை பலி 20
சத்தீஸ்கர் அமைச்சர்
கொரோனா பரிசோதனையை அதிவிரைவாக மேற்கொள்வதற்கு ஏதுவாக சீன நிறுவனத்திடம் ரேபிட் டெஸ்ட் கிட்களை கொள்முதல் செய்ய கடந்த ஜனவரி மாதமே ஆர்டர் கொடுத்தது தமிழக அரசு. இந்த விவகாரத்தை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் உமாநாத் ஐ.ஏ.எஸ். தலைமையிலான அதிகாரிகள் குழு கவனித்துக்கொண்டது. இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்னர், ரூ.337-க்கு தென்கொரியா நிறுவனத்திடம் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்ததாக சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
விலை எவ்வளவு?
சத்தீஸ்கர் அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக சுகாதாரத்துறைக்கு பெரும் தலைவலியாக மாறியது. தமிழகம் எவ்வளவு ரூபாய் கொடுத்து ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியது என செய்தியாளர்கள் கிடுக்கிப்பிடி போட்டனர். இதனால் விலையை கூற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது தமிழக அரசு. ரூ.600-க்கு கொள்முதல் என்றவுடன் ஏன் இவ்வளவு விலை என தமிழக அரசை நோக்கி கேள்விக்கணைகள் பறந்தன. ஆனால் மத்திய அரசு நிர்ணயித்த விலையில் தான் தமிழக அரசு வாங்கியிருப்பதாகவும், எங்கும் தவறுகள் நடக்கவில்லை எனவும் உமாநாத் ஐ.ஏ.எஸை வைத்தே பதில் கூற வைத்தார் விஜயபாஸ்கர்.
அரசுக்கு நெருக்கடி
சரி விலை அதிகமாயினும் மக்களுக்கு பயன்படுகிறதே என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் அப்போது அவ்வளவாக இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் முடிவுகளை தவறாக காட்டி ரேபிட் டெஸ்ட் கிட் பல்லிழித்த பின்பு தான் இந்த விவகாரம் குறித்த தகவல்களை முழுமையாக திரட்டத்தொடங்கி அரசுக்கு குடைச்சலை கொடுக்கத் தொடங்கியது திமுக. இதனால் முதல்வர் கடுமையாக அப்செட் ஆகிவிட்டாராம். கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் நற்பெயர் எடுத்து வரும் சூழலில் இது என்ன புதுக்கூத்து என சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ பணிகள் துறை அதிகாரிகளிடம் கொந்தளித்து இருக்கிறார் முதல்வர்.
அதிகாரிகள் ரசிப்பு
தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை திமுக ஆதரவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அதிமுக ஆதரவு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் என இரண்டு தரப்பினர் இருப்பதை அங்குள்ள அலுவலக உதவியாளர்களே கேட்டாலே அறிந்துகொள்ளமுடியும். இந்தசூழலில் பீலா ராஜேஷ் செயலாளராக இருக்கும் சுகாதாரத்துறைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் வடிவில் புது சிக்கல் சூழ்ந்திருப்பதை கோட்டையில் உள்ள பல அதிகாரிகளும் தங்களுக்குள் அகமகிழ்ந்து கொள்கிறார்களாம்.
இதனிடையே சீனாவில் வாங்கிய கருவிகள் திருப்பி அனுப்பப்படும், ஆர்டர் ரத்து செய்யப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.