வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் ஓடிய சரக்கு ரயில்.. தென் சென்னையின் 40 வருட கனவு நிறைவேறியது
சென்னை: சென்னை கடற்கரை- வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை, பரங்கிமலை வரை எப்போது நீட்டிக்கப்படும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்து வந்தது. இந்நிலையில் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் விரிவுப்பணி ஒருவழியாக முடிந்துவிட்டது. இதனை உறுதிசெய்யும் விதமாக சென்னை கடற்கரை-வேளச்சேரி-பரங்கிமலை மின்சார ரயில் பாதை இணைப்புப் பணி மீதமிருந்த, 5 கி.மீ. தூரத்திற்கு சரக்கு ரயில் நேற்று வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்ட திட்டம் தான் பறக்கும் ரயில். சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வழியாக பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் அமைக்க 1985ம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது முடிவு செய்யப்பட்டிருந்தது. அந்ததிட்டம் ஒருதலைமுறைக்கே வயதாகிவிட்ட நிலையில், இப்போது தான் முழுமை அடைந்துள்ளது.கிட்டத்தட்ட 40 வருடம் மக்கள் காத்திருந்தே முழு ரயில் சேவையை பெறுகிறார்கள்.

முதலில் சென்னை கடற்கரை - மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 266 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 1997ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. 2ஆம் கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டப் பணிகள் 877 கோடியே 59 லட்சம் ரூபாயில் கடந்த 2007ல் முடிக்கப்பட்டது. இதன் பிறகு, வேளச்சேரி - பரங்கிமலை இடையே 3ஆம் கட்ட பணி 495 கோடி ரூபாயில் 5 கிமீ தூரத்திற்கு கடந்த 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதில் வெறும் 3 ஆண்டுகளில் 90 சதவீதம் வரை நிறைவடைந்தது. ஆனால் இந்த திட்டத்தை அதற்கு அடுத்து செயல்படுத்துவதில் எந்த பெரிய முன்னேற்றமும் பல ஆண்டுகளாக ஏற்படவில்லை.
அதன்பிறகு ஆரம்பிக்கப்பட்ட சென்னை மெட்ரோவில் கூட ரயில்கள் ஓடத்தொடங்கிவிட்டது.இரண்டாம் கட்ட மெட்ரோவும ஓடிவிட்டது. ஆனால் 15 வருடங்களுக்கு மேலாக சென்னை மக்கள் வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டது. ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையிலான 500 மீட்டர் தூர பணியில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கலால் திட்டமே நீண்ட காலமாக கிடப்பில் இருந்தது.
இந்நிலையில் ஆதம்பாக்கத்தில் இருந்து 500 மீட்டருக்கான பறக்கும்ரயில் திட்டப் பணியில் நிலம் கையகப்படுத்தும் பணி நீதிமன்ற உத்தரவுகளுக்கு பின்னரே நிறைவு பெற்றது. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக மீண்டும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பறக்கும் ரயில் திட்டம் நீட்டிப்புக்கு திட்டமதிப்பீடு ரூ.734 கோடியாக மாற்றி அமைக்கப்பட்டு பணிகள் நடந்தது.
இதற்காக தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு, மேம்பால இணைப்பு பணிகள் நடந்தது. அதன்பிறகு தண்டவாளம் அமைப்பது, மின் மயமாக்கல் உள்பட பல்வேறு பணிகள் நடந்தது.தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டன. தண்டவாளங்களை ஆய்வு செய்து, சேவைகளை இயக்க ஒப்புதல் அளிக்குமாறு தெற்கு கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்பு ஆணையரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதற்காக சரக்கு ரயில் இயக்கி நேற்றுசோதனை நடத்தப்பட்டது. சோதனை வெற்றிகரமாக நடந்தது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, இனி அடுத்தகட்டமாக பரங்கிமலை வேளச்சேரி இடையே உள்ள பாதையில் மின்சார ரயில் ஒன்று இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வேயின் பாதுகாப்பு கமிஷனர் முன்னிலையில் அதிவேக ரயில் இயக்கி இறுதிச் சோதனை நடத்தப்படும். இந்த சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பிறகு, வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் தொடங்கும் என்று கூறினார்கள். அனேகமாக ஜனவரியில் வேளச்சேரி பரங்கிமலை இடையே ரயில்கள் ஓட வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications