தமிழகத்தை சேர்ந்த கட்சி சார்பற்ற நல்ல மனிதர் கவர்னரானால் வரவேற்போம்- அண்ணாமலை சொல்வது இளையராஜாவையா?
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த, கட்சி சார்பில்லா நல்ல மனித ஒருவர் கவர்னரானால் வரவேற்போம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் பிரதமர் மோடியை புகழ்ந்து சர்ச்சையில் சிக்கிய இசைஞானி இளையராஜாவை மனதில் வைத்துதான் அண்ணாமலை இப்படி கூறினாரா? என்கிற விவாதமும் எழுந்துள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தற்போது தெலுங்கானா-புதுச்சேரி ஆளுநராக பொறுப்பு வகிக்கிறார். அதேபோல் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய அமைச்சராக்கப்பட்டார். தமிழக மூத்த பாஜக தலைவர் எல்.கணேசன், மணிப்பூர் மாநில ஆளுநராக்கப்பட்டார்.

தமிழிசை சவுந்தரராஜன்
இதனால் பல தமிழக பாஜக சீனியர் தலைவர்கள் கனவுகளில் மிதந்து கொண்டிருக்கின்றனர். இதன் உச்சமாக ஜனாதிபதி தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜனை பாஜக நிறுத்தப் போகிறது என தகவல்களும் வெளியானது. ஆனால் இது தொடர்பாக சீரியசாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல்
கடந்து செல்கிறார் தமிழிசை.

இளையராஜா சர்ச்சை
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு நூல் ஒன்றுக்கு முன்னுரை எழுதினார் இசையமைப்பாளர் இளையராஜா. இது தமிழகத்தில் மிகப் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பான ஏராளமான விமர்சனங்களும் எழுந்தன. மேலும் இளையராஜாவுக்கு அந்த பதவி தரப் போகிறார்கள்.. இந்த விருது தரப்போகிறார்கள் என்கிற விவாதமும் களை கட்டியது. இதனிடையே தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கேரளாவின் ஆளுநராக நியமிக்கப்படப் போகிறார் என்கிற ஒரு தகவலும் இணைந்து கொண்டது.

அண்ணாமலை பேட்டி
இது தொடர்பாக சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் துணை வேந்தர் பதவியை ஆளும் திமுக ஒரு வியாபாரப் பொருளாக பார்க்கிறது. ஆளும் திமுகவை சேர்ந்த, ஆளும் கட்சியை ஆதரிக்கக் கூடிய ஒரு மனிதருக்கு கொடுக்கக் கூடிய பதவியாக அதை நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆளுநரைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக நன்றாக செயல்படும் உயர் கல்வித் துறையில் அரசியலைப் புகுத்தி மாணவர் நலனைக் கெடுக்க வேண்டும் என நினைக்கிறது திமுக அரசு.

பாஜகவும் கவர்னர் பதவியும்
தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவை சேர்ந்த மாண்புமிகு தலைவர்கள், மக்கள் பணி செய்யக் கூடிய தலைவர்கள், எந்த மாநிலத்தின் கவர்னராகப் போனாலும் வரவேற்போம். இந்தியாவின் உயர் பொறுப்புக்கு சென்றாலும் வரவேற்போம். ஆனால் யாரை எங்கே போடுகிறார்கள் என்கிற குழுவில் நான் கிடையாது. எனக்கு அது தெரியாது.
Recommended Video

நல்ல மனிதருக்கு கவர்னர் பதவி
தமிழ்நாட்டில் இருந்து பாஜக அல்லது பாஜகவை தாண்டி, தமிழ்நாட்டில் இருந்து எந்த ஒரு நல்ல மனிதரும் கூட கட்சி சார்பின்றி நல்ல ஒரு மனிதர் கவர்னராக சென்றால் வரவேற்கிறோம்.குறிப்பாக ஹெச்.ராஜா போன்ற நல்ல தலைவர்கள், மக்களுக்கு தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்ற தலைவர்கள், அவர்களுக்கு எல்லாம் பெரிய பொறுப்பு வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அண்ணாமலை கூறினார். கட்சி சாராத நல்ல மனிதர் ஒருவர் கவர்னாரானால் வரவேற்போம் என அண்ணாமலை கூறியிருப்பது இளையராஜாவைத்தானா? என்கிற புதிய விவாதமும் இப்போது எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications