கொளத்தூரில் ரூ.72 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை! அடிக்கல் நாட்டிய முதல்வர்!
முதலமைச்சரின் சொந்த தொகுதியான கொளத்தூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி மருத்துவமனை.
சென்னை: கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் மாற்றுத்திறனாளிகள் சிகிச்சைப் பிரிவுக்காக 71 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சிறப்பு மருத்துவமனைக் கட்டடத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள பெரியார் நகர் அரசு புறநகர் சிறப்பு மருத்துவமனையின் சிறப்பு அம்சங்கள் வருமாறு;
சுகாதாரத்துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை, விபத்துகாய சிகிச்சைப் பிரிவு, தொற்றுநோய் பிரிவு, டயாலிசிஸ், இரத்த வங்கி போன்ற சேவைகள் வழங்க உலக வங்கி திட்டத்தின் கீழ் 71.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் 7.5.2022 அன்று "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது தொகுதி மக்களுடைய தேவைகளை அறிந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் 10 முக்கியத் திட்டங்கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பெரியார் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன்படி, பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் 1,18,371 சதுர அடி பரப்பளவில் 71 கோடியே 81 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு கொண்ட சிறப்பு மருத்துவமனைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.
இப்புதிய மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக வசதிகளுடன்கூடிய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புறநோயாளிகள் பிரிவு, கூழாங்கல் பதித்த நடைபயிலும் கூடம் மற்றும் இயன்முறை சிகிச்சைக் கூடம், மாற்றுத்திறனாளிகளுக்கான உள்நோயாளிகள் பிரிவு வார்டுகள், செயற்கை கை, கால் தயாரிக்கும் கூடம் ஆகியவையும், 20 படுக்கைகளுடன் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு உயர்த்துதல், ECHO ஆய்வகம் அமைக்கப்படவுள்ளன.
இதேபோல் மகப்பேறு பிரிவு, இரத்த வங்கி, மூன்று அறுவை சிகிச்சை அரங்குகள், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு, முழு உடல் பரிசோதனை மையம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டப் பிரிவு, நம்மை காக்கும் 48 திட்டப் பிரிவு, அனைத்து வித தீவிர சிகிச்சை பிரிவுகள் போன்ற மருத்துவப் பிரிவுகள் அமைக்கப்படவுள்ளது. இப்புதிய கட்டடத்தில் மின் தூக்கி வசதிகள், ஜெனரேட்டர் வசதிகள், சிறப்பு மருத்துவ இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தீத்தடுப்பு கட்டமைப்புகள், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சிக் கட்டமைப்புகள் போன்ற வசதிகளும் அமைக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications