கிபி 13-ல் அழிந்த சோழ பேரரசுக்கு கிபி 14-ல் உருவான திருவாவடுதுறை ஆதினம் குருவா? வானதியால் சர்ச்சை!
சென்னை: சோழப் பேரரசர்களுக்கு திருவாவடுதுறை ஆதினம் குருவாக விளங்கினார் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பி உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் தமிழ்நாட்டில் 21 ஆதினங்கள் சிறப்பிக்கப்பட்டனர். இது தொடர்பாக வானதி சீனிவாசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நமக்கு நாமே கட்டிமுடித்து பாரத பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தில், சோழ பேரரசர்களுக்கு குருவாக விளங்கிய திருவாவடுதுறை ஆதீனத்தால், தமிழோசை ஒழிக்க, தேவார பாடல்கள் பாட செங்கோல் நிறுவப்பட்டது, நம் தாய் மொழி தமிழுக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த பெருமையும் அங்கீகாரமுமாகும்! பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தமிழ் உலகெங்கிலும் எதிரொலிக்கிறது, அது நம் தமிழ் மொழியின், தொன்மையை, பெருமையை உலகுக்கே எடுத்துரைக்கிறது! இவ்வாறு வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

இதில் சோழ பேரரசர்களுக்கு குருவான விளங்கிய திருவாவடுதுறை ஆதீனம் என வானதி சீனிவாசன் எழுதியிருப்பதுதான் நெட்டிசன்களால் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், தமிழ்நாட்டில் சோழர்கள் காலம் என்பது கிபி 13-ம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. கி.பி.1246-ம் ஆண்டு முதல் கிபி 1279 வரையிலான 3-ம் ராஜேந்திர சோழன், பிற்கால சோழர்களின் இறுதிப் பேரரசர். பாண்டியர்களின் உக்கிர தாக்குதலில் சோழப் பேரரசு நிர்மூலமாகி சிற்றரசு நிலைக்கு தள்ளப்பட்டு காலத்தால் அழிந்து போனது.

ஆனால் தமிழ்நாட்டில் சைவ சமயம் வளர்க்க உருவாக்கப்பட்ட ஆதீனங்கள், ஆதினங்கள், மடங்களின் வரலாறு என்பது கி.பி.14-ம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. வானதி சீனிவாசன் சொல்லுகிற திருவாவடுதுறை ஆதீனம், தமிழ்நாட்டின் முதலாவது ஆதீனமாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் திருவாவடுதுறை ஆதீனம் கி.பி.14-ம் நூற்றாண்டில் அதாவது சோழப் பேரரசு அழிவுக்குப் பின்னரே உருவானது. வரலாறு இப்படி இருக்கும் போது சோழப் பேரரசர்களுக்கு திருவாவடுதுறை ஆதினம் குருவாக இருந்தது எப்படி வானதி சீனிவாசன் பதிவிட்டாரோ என கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்.












Click it and Unblock the Notifications