சென்னை மாநகராட்சி பலே.. தெரு நாய்கள் தொல்லைக்கு முடிவுகட்ட புது யோசனை.. உணவளிக்க தனி இடமாமே.. சபாஷ்
சென்னை: சென்னையில் தெருநாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை ஒதுக்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மனிதர்கள் நாகரீக சமூகமாக பரிணமிக்க தொடங்கியது முதல் நாய்கள் நம்முடன் பழகி வருகின்றன. ஆரம்ப காலத்தில் வேட்டையின்போது மனிதர்கள் உண்டு மீதமிருந்த எலும்புகளை சாப்பிட மனிதர்களுடன் பழகியது. தற்போது இது மனிதர்களுடன் பிரிக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இதில் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக வெறி நாய்க்கடி ரேபிஸ் எனும் உயிர் கொல்லி நோயை ஏற்படுத்துகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த ரேபிஸ் நோயால் ஏற்படும் மரணங்களில் 65 சதவிகிதம் இந்தியாவில்தான் ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும் நாய்க்கடி சம்பவங்கள் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி வருகின்றன. தலைநகர் சென்னையில் மாநகராட்சிக்கு வரும் அழைப்புகளில் பெரும்பாலான அழைப்புகள் நாய் தொல்லைகள் தொடர்பாகவே வருகின்றன.
இந்த பிரச்னையை சமாளிக்க மாநகராட்சியும் அடிக்கடி சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதுதான் இதற்கான சிறந்த தீர்வாக இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே மாநகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு அந்நாயை அதே இடத்தில் விடப்படுகிறது. சென்னையில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் இருக்கின்றன.
இதில் கடந்த மார்ச் மாதம் மட்டும் சுமார் 20,385 பிடிக்கப்பட்டன. இவ்வற்றில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே மற்றொரு பிரச்னையும் எழுந்துள்ளது. அதாவது, தெரு நாய்களுக்கு உணவளிப்பதால்தான் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும், இது அந்த வழியாக வெளியாட்கள் சென்று வரும்போது அவர்களுக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்துவதாக புகார்கள் குவிந்தன.
இது தவிர பல்வேறு சுகாதார சீர்கேடுகளும் நாய்கள் ஏற்படுத்துவதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து சென்னையில் தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதற்காக இடம் ஒதுக்குவது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே தெரு நாய்களுக்கு அத்துமீறி உணவளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் எந்த மாதிரியான நடவடிக்கை என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இப்படி இருக்கையில்தான் தெரு நாய்களுக்கு உணவு அளிக்க தனி இடம் ஒதுக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் கலந்தாலோசனை செய்து இதற்கான இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இப்படி தனி இடம் ஒதுக்குவதன் மூலம் அந்நாய்கள் ஒரு ஏரியாவிலிருந்து மற்ற ஏரியாக்களுக்கு பரவுவது தடுக்கப்படும். அதேபால உணவு குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் என்பதால் அந்நாய்கள் அங்கேயே இருந்துவிடும்.
எனவே இரவு நேரங்களில் பைக்கில் செல்வோர் அச்சப்பட தேவை இருக்காது என்று சொல்லப்படுகிறது. மறுபுறம் தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த குடும்ப கட்டுப்பாடு திட்டம் பயன்தராது என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். இவ்வாறு சிகிச்சையளிக்கப்பட்ட தெருநாய்கள் மீண்டும் குட்டிகளை ஈன்றுவது இயல்பாகிவிட்டது என்றும், இது அரசாங்கத்திற்கு நஷ்டத்தைதான் ஏற்படுத்தும் என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர். எது எப்படியாயினும், நாய்களின் தொந்தரவு இல்லாமல் இருந்தால் சரி என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications