ஒரு பக்கம் சண்டை! மற்றொரு பக்கம் சட்டம்! நீதிமன்ற படியேறிய தொண்டர்கள்! அதிமுகவுக்கு மீண்டும் சிக்கல்
சென்னை : அதிமுக கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு நடைபெறுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் வழக்கம் போல் சென்னை வானகரத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது
இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனு தள்ளுபடியான நிலையில், அதிமுக உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தடை வேண்டும்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை என கூறியுள்ளார். உட்கட்சி தேர்தலுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை எனவும் கூறி, அதுதொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு மனு தாக்கல்
இந்நிலையில் அதிமுக கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தடை விதிக்க வேண்டும்
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க கோரி கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அதில், கட்சி விதிகள்படி நிர்வாக ரீதியாக பொதுச்செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

பொதுக்குழுவுக்கு சிக்கல்
மேலும், கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் என்றும், புதியதாக கட்சி பதவிகளில் நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக பொதுக்குழு நடைபெறுமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications