"அப்பா" மாதிரியே ஆட்சி! அடுத்து முறையும் நீங்கதான் சிஎம்! வாக்கிங் போன முதல்வரை பாராட்டிய முதியவர்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் வாக்கிங் சென்ற போது அங்கே வழியில் அவரை பார்த்த நபர் ஒருவர், முதல்வரை பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பினார்,

இருப்பினும், அவரை ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். இதன் காரணமாக முதல்வர் ஸ்டாலின் வெளியூர் பயணங்களைத் தவிர்த்தே வந்தார். திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்திலும் கூட முதல்வர் உரையை அமைச்சர் உதயநிதியே வாசித்தார்.
முதல்வர் ஸ்டாலின்: மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி முதல்வர் ஓய்வெடுத்தே வந்தார். அதேநேரம் முதல்வர் ஸ்டாலின் தினசரி வாக்கிங் செல்வதைத் தவிர்க்காமல் தொடர்ந்தே வந்தார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் இன்று வழக்கம் போல வாக்கிங் சென்றார். அப்போது அவரை சந்தித்த முதியவர் ஒருவர், முதல்வர் ஸ்டாலினை பாராட்டித் தள்ளினர். ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகக் குறிப்பிட்ட அந்த நபர், அடுத்த முறையும் ஸ்டாலின் வெல்வது உறுதி என்றார். மேலும், உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளும்படியும் அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோவை திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், அதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதில் அந்த முதியவர், "நீங்கள் நன்றாக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறீர்கள்.. அப்பா மாதிரியே நல்ல பண்ணுங்க.. நீங்க தான் அடுத்த முறையும் நிச்சயம் வருவீர்கள்... கவலையே வேண்டாம். இதே மாதிரி ஒரு நல்லாட்சியைக் கொடுங்கள்.
வீடியோ: வேண்டுமென்றே குறை சொல்பவர்கள் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.. யார் வாயையும் நம்மால் அடைக்க முடியாது. நீங்கள் இதேபோல ஆட்சி செய்யுங்கள்.. நன்றாக இருங்கள்.. உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்கிறார். முதல்வர் ஸ்டாலின் அந்த நபருக்கு நன்றி தெரிவிக்கிறார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சட்டசபை கூட்டத்தொடர்: முன்னதாக இன்றைய தினம் சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியிருந்தார். அந்த மசோதாக்கள் இன்று மீண்டும் நிறைவேற்றச் சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், "மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை.. காய்ச்சல், தொண்டை வலியால் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தேன்.. என் உடல்நலனை விட மக்கள் நலன் முக்கியம் என்பதால் சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளேன்" என்று மெல்லிய குரலில் பேசியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications