எடப்பாடி பதறட்டும்.. கோபாலபுரம் கதறட்டும்.. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பாஜக போஸ்டரால் பரபரப்பு
அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக நிர்வாகி ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: எடப்பாடி பதறட்டும், கோபாலபுரம் கதறட்டும். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக நிர்வாகி ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவில் அதிகாரப் போட்டி நிலவுகிறது. அதிமுகவின் முக்கிய பதவிகளை எடப்பாடி பழனிசாமி கைப்பற்றினார். 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் பதவி முதல் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை அனைத்தையும் எடப்பாடி தன் வசப்படுத்தினார்.
அதே போல் தனது ஆதரவாளர்களுக்கு கட்சியில் பதவியோ தேர்தலில் சீட்டோ வாங்கக் கூட எடப்பாடியின் சம்மதத்தை பெறும் நிலை ஓபிஎஸ்ஸுக்கு இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான வழக்குகளுக்காக அவர் சிறை செல்லும் போதெல்லாம் ஓபிஎஸ்ஸை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து சென்றார்.

ஓபிஎஸ்
அப்படிப்பட்ட ஓபிஎஸ்ஸுக்கே எடப்பாடியிடம் கெஞ்சி கேட்கும் நிலையா என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் பாஜகவின் செல்வாக்கை வைத்து எப்படியாவது அதிமுகவை மீட்கலாம் என நினைத்திருந்த ஓபிஎஸ்ஸுக்கு ஏமாற்றமே விஞ்சியது. தற்போது அதிமுக- பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைக்கும் என பாஜகவினர் கூறி வருவது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான் பாஜகவின் ஐடி விங் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் பலர் அதிமுகவில் இணைந்தனர். இது பாஜகவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

பாஜக தலைவர் அண்ணாமலை
இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை அரும்பாக்கத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய போது பாஜகவை நாம் வலுப்படுத்த வேண்டும். தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து சலாம் போடமும் தனக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை. தமிழகத்தில் நாம் தனியாக தேர்தலை சந்தித்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதையும் மீறி அதிமுகவுடன் கூட்டணி என சென்றால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்றார்.

மூத்த தலைவர்கள்
அண்ணாமலையின் இந்த கருத்தை பாஜகவின் மூத்த தலைவர்களே விரும்பவில்லை. இதை வானதி சீனிவாசன், கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் எதிர்த்தனர். இந்த நிலையில் கருப்பு முருகானந்தமும் அண்ணாமலைக்கு அறிவுரை கூறும் படி ஒரு விஷயத்தை ட்விட்டரில் போஸ்ட் செய்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக மதுரையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

போஸ்டரால் பரபரப்பு
மதுரை மாவட்ட பாஜக மற்றும் சோலை பிரதர்ஸ் சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் கழகங்கள் இல்லா தமிழகம், கவலைகள் இல்லாத தமிழர்கள், உங்களோடு ரத்தம் இந்த உண்மையான கூட்டம் உண்டு. எங்கள் அண்ணாவே எடப்பாடி பதறட்டும்! கோபாலபுரம் கதறட்டும்! என அச்சடிக்கப்பட்டுள்ளது. இது திராவிட அண்ணா இல்லை, சங்கிகளின் அண்ணா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வார் ரூம்
அண்ணாமலை வார் ரூம் வைத்து கொண்டு மூத்த தலைவர்கள் மேல் புழுதி வாரி பூசி வருகிறார் என அக்கட்சி நிர்வாகிகளே விமர்சித்து வரும் நிலையில் எடப்பாடி பதறட்டும் என குறிப்பிட்டு ஒரு போஸ்டரை பாஜகவினர் அடித்துள்ளது, அதிமுக- பாஜக இடையே உள்ள கூட்டணி பிரச்சினையை இப்போது தீர்க்கும் என தெரியவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications