தீபாவளிக்கு திமுககாரங்க நாங்க வாழ்த்து சொல்லாதது 'இதுக்குதான்' தெரியுமா? பாஜகவுக்கு ஆ.ராசா பதிலடி
சென்னை: அறிவியல், பகுத்தறிவுக்கு ஒவ்வாத பண்டிகை தீபாவளி என்பதால் திமுக தலைவர்கள் வாழ்த்து சொல்வது கிடையாது என அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பேசிய பழைய வீடியோ இன்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் திமுக தலைவர்கள் ஏன் வாழ்த்து தெரிவிப்பது இல்லை என்கிற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு திமுக ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்பதை விளக்கும் ஆ.ராசா எம்.பி.யின் பழைய பொதுக்கூட்ட வீடியோ சமூக வலைதளங்களில் இன்றும் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ஆ.ராசா எம்.பி. பேசியிருப்பதாவது: உலகில் அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கை உள்ளது. பவுத்தம், சமணம், ஆசீவகம் தவிர மற்ற மதங்கள் உலகை கடவுள் தான் தோற்றுவித்தார் என சொல்கின்றன.
இயற்கையாக உள்ளவற்றை கடவுள்தான் படைத்தார் எனக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை என்பது தற்போது உறுதியாகிவிட்டது. மூட நம்பிக்கை இந்து மதத்தில் மட்டுமல்ல கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாமியத்திலும் உள்ளது. அதனையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏசு கிறிஸ்து தோன்றியதற்கும், முகமது நபி தோன்றியதற்கும் வரலாற்று ஆதாரம் உள்ளது. அவர்கள் கூறிய போதனைகள் மெய்யா பொய்யா என்ற விமர்சனத்துக்கு அப்பால், அவர்கள் இருவரும் பிறந்ததற்கான ஆவணம் உலகில் உள்ளது. அது ஒரு வரலாற்று நிகழ்வு. அவர்களின் மார்க்கத்தை வழி மொழியும் மக்களுக்கு வாழ்த்து கூறுவது என்பது ஒருவித மனிதநேயம்.
நாளைக்கு முதல்வர் தீபா-வளி வாழ்த்து சொல்லலனு ஒப்பாரி வைக்காதீங்கடா சங்கிகளா.... pic.twitter.com/3XY1eMqQel
— ஜெயசந்திரன் திமுக 🖤♥️ (@jaya2016maha) November 11, 2023
இந்துக்களுக்கு எதனை ஆதாரமாகக் கொண்டு வாழ்த்துச் சொல்ல முடியும்? பத்மாசூரன் என்ற அசுரன், அதாவது திராவிடனை அழிப்பதற்காக தேவர்களான பிராமணர்கள் நடத்திய போராட்டம். பத்மாசூரன் உலகை பாயாகச் சுருட்டியதாகக் கூறப்படுகிறது. 1600ல் புருனோ என்ற கிறிஸ்துவன் உலகம் உருண்டையானது என கூறியபோது அவரது கூற்றை அம்மதத்தைச் சேர்ந்தவர்களே ஏற்கவில்லை. பிறகு அறிவியலை உணர்ந்தனர் கிறிஸ்துவர்கள். ஆனால் இந்து மதத்தில் பத்மாசூரன் என்பவன் உலகை பாயாகச் சுருட்டி கடலில் வைத்ததாக கூறுகிறார்கள். கடல் எங்கு இருக்கிறது? அதுவும் பூமிக்குள் தானே இருக்கிறது. அதற்குள் எப்படி பூமியை வைக்க முடியும்?
பூமா தேவியை மீட்க வேண்டும் என விஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டதால், அவர் பன்றியாக மாறி கடலுக்குள் சென்று, பூமா தேவியை மீட்டதாகக் கூறப்படுகிறாது. அவர்கள் இருவரும் இணைந்து நரகாசூரன் என்பவனை பெற்றெடுத்தார்கள் என்றும், அந்த நரகாசூரன் தேவர்களான பிராமணர்களுக்கு எதிராக இருந்ததால் அவனை வதம் செய்து எரித்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனையே தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத வகையில் இருப்பதாலயே நாம் தீபாவளியை ஏற்கவில்லை. தீபாவளிக்கு ஏன் வாழ்த்து சொல்லவேண்டும் என இப்போது சொல்லுங்கள்? இவ்வாறு அந்த வீடியோவில் ஆ.ராசா பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications