Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முருகன் கோவில்களில் சமஸ்கிருதத்துக்கு பதில் தமிழ் கந்த சஷ்டி கவசம் பாட திராணி உண்டா?: ஆ. ராசா பொளேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்க் கடவுள் முருகன் கோவில்களில் சமஸ்கிருதத்துக்கு பதில் இனி தமிழில் கந்த சஷ்டி கவசம் பாடுவோம் என சொல்வதற்கு திராணி இருக்கிறதா? என்று திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

நியூஸ் 7 தொலைக்காட்சியின் வியூகம் நிகழ்ச்சியில் ஆ. ராசா அளித்த பேட்டியில் கூறியிருந்ததாவது:

இடஒதுக்கீடு விவகாரத்தில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு இருக்கிறது என்கிறது மத்திய அரசு. ஆனால் மெடிக்கல் கவுன்சிலோ, ஓபிசிக்கான 27% இடஒதுக்கீடு ஆல் இந்தியா கோட்டாவுக்கு பொருந்தாது என்கிறது. அப்படியானால் மெடிக்கல் கவுன்சில் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது? அதை யாருடைய குரலாக எடுத்துக் கொள்வது?

தமிழகத்தில் அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் உட்பட பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று சமூக நீதியில் அக்கறை உள்ள அத்தனை கட்சிகளும் ஒருதரப்பாக ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் பாஜக மனு தாக்கல் செய்ததா? ஆனால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெடிக்கல் கவுன்சில் 27% இடஒதுக்கீடு இருக்கிறது- அது ஆல் இந்தியா கோட்டாவுக்கு இருக்கிறதா? என்பதில் தெளிவு இல்லை. அதனால் 27% இடஒதுக்கீடு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறது. இதற்கு அவசியம் என்ன?

பாஜகவின் முட்டாள்தனம்

பாஜகவின் முட்டாள்தனம்

இதில் வெற்றி என்பது போருக்கு போனவர்களுக்குத்தானே.. போராட்டக் களத்தில் அவர்கள் குதித்திருந்தால் வெற்றி என சொல்லலாம். உங்களை எதிர்த்து வழக்கு போட்டு நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் எங்களுக்கே வெற்றி என்று சொன்னால் இதைவிட முட்டாள்தனம்.. இதற்கு மேலான வார்த்தைகளை பயன்படுத்த விரும்பவில்லை. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

காங்கிரஸுக்கு சான்று தரவில்லை

காங்கிரஸுக்கு சான்று தரவில்லை

அன்று வி.பி.சிங் அரசை எதற்காக கவிழ்த்தீர்கள்? எப்போது கவிழ்த்தீர்கள்? ராமருக்கு கோவில் கட்ட ரத யாத்திரை போனது அப்புறம். உங்களது நோக்கமே ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு தரும் மண்டல் கமிஷன் வரக் கூடாது என்பதுதானே. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை காங்கிரஸும் கிடப்பில் போட்டிருக்கலாம். காங்கிரஸ் கட்சிதான் சமூக நீதிக்கு அத்தாரிட்டி என்று நாங்கள் பட்டயம் கொடுக்கவில்லை. பெரியாரோ, அண்ணாவோ, கருணாநிதியோ காங்கிரஸ்தான் இடஒதுக்கீடு கொண்டு வந்தது என்று சொன்னோமா? 1951-ல் நேருவுக்கே இடஒதுக்கீடு என்ன என்பது புரியவில்லை. அன்றைக்கு நாங்கள் விளக்கம் கொடுத்தோம். இடஒதுக்கீட்டுக்காக திருத்தம் கொண்டு வந்த நேருதான், ஒரு அரசாங்கம் மனிதநேயத்துடனும் இருக்க வேண்டும் என்றார்.

வரலாற்றை திரிக்கிறீர்கள்

வரலாற்றை திரிக்கிறீர்கள்

வி.பி.சிங் ஆட்சியை பாஜக கவிழ்த்த பின்னர் அவரை தமிழகத்துக்கு அழைத்து வந்து சமூக நீதி காவலர் என கொண்டாடியது திமுக. அதனது தொடர்ச்சியாகவே ஓபிசி இடஒதுக்கீடு கோரி திமுக இப்போது வழக்கு தொடர்ந்திருக்கிறது. வெற்றியும் பெற்றிருக்கிறோம். ஏன் வரலாற்றை திரித்து பேசுகிறீர்கள்? இது அயோக்கியத்தனமல்லவா அது?

இதுதான் புதிய கல்வி கொள்கை

இதுதான் புதிய கல்வி கொள்கை

புதிய கல்வி கொள்கை என்பது சமஸ்கிருத திணிப்பு- மீண்டும் வருணாஸ்ரமம் என 2 வரிகளில் சொல்லலாம். சமஸ்கிருதத்தை நீங்கள் ஏன் முன்னிறுத்துகிறீர்கள்? சமஸ்கிருதம் இங்கே யாராலாவது பேசப்படுகிறதா? ஒரு மொழி மாநிலத்தில் பேசப்பட்டு இந்திய மொழிகளில் வழக்கில் இருக்கும்பட்சத்தில் அந்த மொழியை ஊக்குவிக்கிறோம் என்று சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கிறது? பேசப்படாத, சுத்தமாக செத்துப்போன, அர்ச்சனைக்கு மட்டுமே பயன்படுகிறமொழியை- 25,000 பேர் பேசுகிற மொழிக்கு எதுக்கு முன்னுரிமை? 100 கோடி பேர் இருக்கும் நாட்டில் வெறும் 25,000 பேர் பேசுகிற ஒரு மொழிக்கு ஏன் புதிய கல்வி கொள்கையில் இவ்வளவு முக்கியத்துவம்?

நேரு போல் மோடி இல்லை

நேரு போல் மோடி இல்லை

நேரு பிரதமராக இருந்த போது நாசிக்கில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் உயர்ஜாதிக்காரர்கள் பிடியில் காங்கிரஸ் இருந்த போது இந்தி திணிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது இதை எதிர்த்த நேரு பிரதமர் பதவியை தூக்கி எறிவேன் என்றார். காங்கிரஸிலும் இந்துத்துவா பார்வை உள்ளவர்கள் இருந்தனர் ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள். காங்கிரஸில் இருந்த பார்வை இன்று பாஜகவுக்கு இருக்கிறது. ஆனால் காங்கிரஸில் அதை எதிர்க்க நேரு இருந்தார்.. இன்று பாஜகவில் பிரதமராக இருக்கும் மோடி அப்படி இல்லை. புதிய கல்வி கொள்கையில் ஒரு சில அம்சங்கள் நல்லதாக இருக்கலாம்.

குலத்தொழிலுக்கு போக சொல்லும் புதிய கல்வி கொள்கை

குலத்தொழிலுக்கு போக சொல்லும் புதிய கல்வி கொள்கை

அதற்காக வருணாஸ்ரம தர்மத்தை திணிக்கும் வகையில் 3-ம் வகுப்பில் ஒரு தேர்வு, 5-ம் வகுப்பில் ஒரு தேர்வு என்கிறீர்கள்.. இப்படி எல்லாம் ஒரு தேர்வு வைத்திருந்தால் இந்த ஆ. ராசா. பார்லிமெண்ட் கட்டிடத்தை எட்டிக் கூட- ஒரு டூரிஸ்டாக கூட போய் பார்திருக்கவே முடியாது. காமராஜர் பள்ளிகளை திறந்தார்; கருணாநிதி கல்லூரிகளை திறந்தார். பன்னிரெண்டாம் வகுப்புக்கு பின்னரே நாம் என்னவாகப் போகிறோம் என்கிற புரிதலே வந்தது. 3-ம் வகுப்பு 5-ம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் தொழிற்கல்விக்கு போகலாம் என ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கிறீர்கள்.அது குலத் தொழிலுக்கு போகச் சொல்கிறது. மண்டல் கமிஷன் அறிக்கை விஞ்ஞானப்பூர்வமானது. 3-ம் வகுப்பில் தேர்ச்சி முடியாமல் போகிற போதே அந்த வயதிலேயே அவனது மூளையை மழுங்கடித்து- உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி- உன் குல தொழிலுக்குப் போ என்கிறது புதிய கல்வி. இதற்குத்தான் சர்வதேச தரம் போன்ற வார்த்தைகளை போர்த்தி வைத்திருக்கிறார்கள்.

குலத்தொழில் விளக்கம்

குலத்தொழில் விளக்கம்

டிவிஷன் ஆப் லேபர் என்பது குறித்து புரிதல் தேவை. வெளிநாடுகளில் ஒருவர் செருப்பு தைக்கிறார் எனில் அவர் பிறப்பால் செருப்பு தைப்பவர் அல்ல.. அன்றைய அவரது தொழில் அவ்வளவுதான். நாளை நகைக் கடைக்கு போனால் அவர் ஆசாரியாகிவிடுவார். சீனாவில் சொல்லப்படுகிற ஸ்கில் டெவலப்மெண்ட் என்பது பை பர்த்- பிறப்பால் வரவில்லை. இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் ஸ்கில் டெவலப்மெண்ட்டை மறைமுகமாக முன்வைக்கிறீர்கள். அதனால்தான் வருணாஸ்ரம தருமத்தை ஜாதியை புத்தாக்கம் செய்கிறது புதிய கல்வி கொள்கை என்கிறோம்.

மோடியின் பொய் கணக்கு

மோடியின் பொய் கணக்கு

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற குறள்; யாதும் ஊரே யாவரும் கேளீர் என்கிறது தமிழ் இலக்கியம். இதை எல்லாம் விட்டுவிட்டு எங்கேயாவது ஒரு குறளை எடுத்து மேற்கோள்காட்டுவது ஏமாற்றுவேலை என்கிறோம். திருக்குறளை சொன்னால் தமிழக மக்கள் ஏமாந்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடி பொய்கணக்கு போடுகிறார்.

ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும்

ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும்

பாஜகவினருக்கு தமிழ் மீது அக்கறை இருந்தால் குறைந்தபட்சம் அனைத்து திட்டங்களுக்கும் தமிழர்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஆங்கிலத்தில் பெயர் வையுங்களேன். இப்போது அனைத்து திட்டங்களுக்கும் இந்தியில் பெயர் வைத்துள்ளீர்கள். எம்.பி.யான என்னாலேயே அந்த பெயர்களை உச்சரிக்க முடியவில்லை. இந்தியாவில் இன்று கொண்டுவரப்படும் திட்டங்களின் பெயர்கள் இந்தியில், சமஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன. ஆங்கிலத்திலேயே கூட இல்லையே

அன்னிய மொழி ஆங்கிலமும் நானும்

அன்னிய மொழி ஆங்கிலமும் நானும்

அன்னிய மொழியான ஆங்கிலத்தில் சமத்துவம் இருக்கிறது.. நீங்கள் முன்வைக்கும் மொழியில் சமத்துவம் இல்லை; அந்த மொழி அறிவியல் பேசுகிறது- உங்கள் மொழி அறிவியல் பேசவில்லை; அந்த மொழி வளர்ந்து வரும் நாகரிகத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறது- உங்கள் மொழி மாற்றிக் கொள்ள மறுக்கிறது; அந்த மொழி உயரிய பண்பாடுகளை பேசுகிறது- உங்கள் மொழியில் இல்லை; என்னை அன்னியப்படுத்துகிறது இந்தியும் சமஸ்கிருதமும். ஆனால் ஆங்கிலம் என்னுடன் நெருங்கியதாக என்னை கட்டி அணைக்கிற மொழியாக இருக்கிறது.; என்னை தொடாதே என்கிறது சமஸ்கிருதம்.. ஆகையால் என்னை ஏற்கிற மொழி எதுவோ எனக்கான மொழி.

கந்த சஷ்டி கவசம் பாட திராணி உண்டா?

கந்த சஷ்டி கவசம் பாட திராணி உண்டா?

தமிழ்க் கடவுள் முருகன் கோவிலில் ஏன் சமஸ்கிருதத்தில் ஓதுகிறீர்கள்? கந்த சஷ்டி கவசத்தை கூட முருகன் கோவிலில் சொல்லுங்களேன். கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்தவர்களுக்கு பதிலடியாக இனி முருகன் கோவில்கள் அனைத்திலும் சமஸ்கிருதம் ஓதப்படமாட்டாது; கந்த சஷ்டி கவசம்தான் பாடப்படும் என சொல்வதற்கு உங்களுக்கு திராணி இருக்கிறதா? இப்போது பாஜகவுக்கு பெரும்பான்மை இருக்கிறது. .3 ஆண்டுகளில் நிலைமை மாறலாம். இதைவிட எல்லாம் பெரும்பான்மையை பெற்றவர் ராஜீவ்காந்தி. நீங்கள் சரித்திரத்தின் திருப்புமுனைக்காக காத்திருங்கள்- ஜனநாயகத்தின் குரல்வளையை நீண்டகாலம் நெறித்து கொண்டிருக்க முடியாது. இவ்வாறு ஆ ராசா கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+