ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி.. முதல்வருக்கு வைத்த கோரிக்கை
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு இன்று சென்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவரது திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது.

அன்னாரை இழந்து வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று தெரிவித்ததோடு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன். இந்தத் துயரத்தில் வாடும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மீண்டு வருவதற்கான மன உறுதியை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இந்தக் கொலையில் சரணடைந்த குற்றவாளிகள், உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கொடுஞ்செயல் புரிந்தவர்களையும், தொடர்புடைய அனைத்து உண்மைக் குற்றவாளிகளையும், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலினும் இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பதிவில்,பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவையொட்டி, அவரது இல்லத்துக்குச் சென்று அவரது திருவுருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தி, துயரில் வாடும் அவரது மனைவி திருமதி. பொற்கொடிக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
கொலை பாதகச் செயலில் ஈடுபட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனையைப் பெற்றுத் தருவோம் என்று சகோதரி பொற்கொடிக்கு உறுதி அளித்தேன். கொலைக் குற்றத்தின் பின்னணியில் இருப்பது யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் எனது அரசு உறுதியாக உள்ளது. இது அனைவருக்குமான அரசு. அனைவரையும் அரவணைத்து எளியோர் நலன் காக்கும் அரசு, நீதியை நிச்சயம் நிலைநாட்டும்! காவல்துறை பாரபட்சமின்றி நெஞ்சுரத்தோடு கடமையை ஆற்றும்" என்று கூறினார்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, ஆம்ஸ்ட்ராங் மறைவின் அதிர்ச்சியில் இருந்தே நான் இன்னும் மீளவில்லை.. எனக்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு என்று கூறினார்.












Click it and Unblock the Notifications