ஆளுநருக்கு "போகாத" மெசேஜ்.. உதயநிதிக்காக ரெடியாகும் புதிய "ரூம்".. ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்
சென்னை: உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் அமைச்சராக்கப்படலாம் என்று தமிழ்நாடு அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கூடுதல் தகவல்கள் சில வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலின் தலைமை பதவி ஏற்று ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டன. 2021 மே மாதம் பதவி ஏற்ற அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறவில்லை.
அப்போது பெரும்பாலும் இளம் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அன்பில் மகேஷ் போன்ற ஒரு சிலர் மட்டுமே இளம் அமைச்சர்களாக இருந்தனர்.

உதயநிதி
அப்போதே உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவை பதவி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அமைச்சரவை மாற்றம் செய்யப்படவே இல்லை. அதன்பின் 1 வருடம் முடிந்த பின் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று செய்திகள் வந்தன. பின்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் அன்று அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கு இடையில் இரண்டு முறை துறை ரீதியான சிறிய மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டன.

சிறிய துறைகள்
கடந்த சில மாதங்களுக்கு முன் 3 சிறிய துறைகள் மட்டும் இலாக்கா மாற்றப்பட்டது. அதன்பின் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார். மற்றபடி அமைச்சரவையில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாற்றத்தின் போதே அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதும் வேறு துறைக்கு மாற்றங்கள் செய்யப்படவில்லை.

மூத்த அமைச்சர்
இந்த நிலையில் சமீபத்தில் மூத்த அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதையடுத்து அந்த மூத்த அமைச்சர் மாற்றப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் மிகவும் மூத்த அமைச்சர் என்பதால் அவர் மீது நடவடிக்கை தனிப்பட்ட வகையில் முதல்வர் ஸ்டாலின் கண்டித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சரவை மாற்றப்பட உள்ளது. உதயநிதி ஸ்டாலின் நாளை மறுநாள் அமைச்சராக்கப்பட உள்ளார். உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிற்கு விளையாட்டுத்துறை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடங்கி பல பணிகளில் நேரடியாக கவனம் செலுத்தினார்.

முதல்வர் ஸ்டாலின்
இதனால் அந்த துறை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் முதல்வர் ஸ்டாலின் வசம் இருக்கும் சிறப்புத்திட்ட செயலாக்கம் துறை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளிக்க வேண்டும். இது மசோதா போல கிடையாது. முதல்வர் எடுக்கும் முடிவிற்கு எந்த தாமதமும் இன்றி ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். இந்த நிலையில்தான் புதிய அமைச்சரவை லிஸ்ட் இன்னும் ஆளுநர் ரவியிடம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

லிஸ்ட்
நாளை காலை இந்த லிஸ்ட் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலைக்குள் ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிப்பார். அதன்பின் நாளை மறுநாள் உதயநிதி ஸ்டாலினின் பதவி ஏற்பு விழாவை நடத்தலாம் என்று திட்டமிடப்பட்டு உள்ளது. மிகமிக எளிமையாக உதயநிதி பதவி ஏற்பார். பெரிதாக கொண்டாட்ட நிகழ்வுகள் இதற்காக செய்யப்படாது என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள அறைகளில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அறை தயாராகிக்கொண்டு இருக்கிறது. அங்கு இருக்கும் ஏசிகள் மாற்றப்பட்டு, புதிய கதவுகள் வைக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications