கிசுகிசுவென பேசிய மாஜி.. அப்படியே சிரித்த ஓபிஎஸ் டீம்.. கவனித்த எடப்பாடி அணி.. சிக்கிக்கொண்ட "சுறா"
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் நடந்த சம்பவம் ஒன்று அதிமுகவினர் இடையே பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கடந்த வாரம் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தொடரில் ஆளுநர் - முதல்வர் மோதல், உதயநிதி ஸ்டாலினின் முதல் பேச்சு, சேது சமுத்திர திட்டத்திற்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதை தொடர்ந்து நடந்த விவாதங்கள் என்று பல அதிரடி சம்பவங்கள் நடைபெற்றன.
ஆனால் இந்த சம்பவங்களுக்கு இடையில் இன்னும் சில சைலன்ட் சம்பவங்களும் அவையில் நடைபெற்றன. அவையில் நடைபெற்ற 3 சம்பவங்கள் அதிமுகவினர் இடையே பெரிய அளவில் கவனம் ஈர்த்து உள்ளது.

எதிர்க்கட்சி துணை தலைவர்
முதல் விஷயம் எதிர்க்கட்சி துணை தலைவருக்கான இருக்கை. அதிமுகவில் தற்போது தேர்தல் ஆணைய விதிப்படி ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இருக்கிறார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதனால் ஒருங்கிணைப்பாளரை இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியில் இருந்து நீக்க முடியாது. அதனால் சட்டப்படி ஓ பன்னீர்செல்வம் இப்போதும் எதிர்கட்சித் துணை தலைவர்தான். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி வைக்கும் வாதத்தில், ஓ பன்னீர்செல்வத்திற்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. ஆர்பி உதயகுமார்தான் எதிர்க்கட்சி துணை தலைவர் என்று வாதம் வைத்து உள்ளார்.

மாற்றம் இல்லை
இதற்காக எடப்பாடி சார்பாக, ஆர்பி உதயகுமார்தான் அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் அவரைத்தான் அந்த இருக்கையில் அமர வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆர்பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக நியமித்து உள்ளது. அதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு இந்த கோரிக்கையை வைத்தது. ஆனால், நான்தான் எதிர்க்கட்சி துணை தலைவர். அதனால் நான்தான் அந்த இடத்தில் தொடர வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடக்கையில் இதில் முடிவு எடுக்க கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து தமிழ்நாடு சட்டசபையில் கடந்த கூட்டத்தொடரிலும், இன்று தொடங்கிய கூட்டத்தொடரிலும் இருக்கைகள் மாற்றப்படவில்லை. இரண்டு தரப்பும் வைத்த கோரிக்கையால் இன்னும் அப்பாவு இருக்கைகளை மாற்றவில்லை.

கூட்டம்
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இதற்காக எடப்பாடி பெரிய அமளியை செய்தார். ஆனால் இந்த முறை அமளி எல்லாம் செய்யவில்லை. ஒரே ஒரு முறை அப்பாவுவை அவையில் சந்தித்தார். அதோடு அவர் இதில் முடிவு எதையும் எடுக்கவில்லை. அவையில் பெரிதாக அமளி எதையும் செய்யாமல் ஓ பன்னீர்செல்வம் அருகிலேயே அமைதியாக அமர்ந்துவிட்டார். எடப்பாடியின் இந்த மனமாற்றம்தான் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. எடப்பாடி இறங்கி போக ரெடியாகிவிட்டாரா? எடப்பாடி ஏன் அமளி செய்யவில்லை? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓ பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி சமாதானமாக செல்ல தயாராகிவிட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இரண்டாவது விஷயம்
இரண்டாவதாக அவையில் கூட்டத்தொடர் முழுக்க அதிமுக சார்பாக ஓ பன்னீர்செல்வம் பலமுறை பேசினார். அதற்கு முன் ஓபிஎஸ் இப்படி அதிமுக சார்பாக பேசும் போதெல்லாம் அதை எடப்பாடி டீம் கடுமையாக எதிர்க்கும். ஆனால் இந்த முறை அப்படி எல்லாம் எதிர்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவையில் பின்னால் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் பலர் ஓ பன்னீர்செல்வம் பேசியதை ரசித்து கேட்டுக்கொண்டுதான் இருந்தனர். ஓ பன்னீர்செல்வம் பேசுவதை எதிர்க்காமல், அவர் பேசுவதை சிரித்தபடி ரசித்துக்கொண்டுதான் இருந்தனர்.

மாஜி
இந்த நிலையில்தான் அவையில் மூன்றாவது விஷயம் ஒன்றும் நடந்தது. ஓ பன்னீர்செல்வத்தின் இடதுகையாக கருதப்படும் நபருடன் அவைக்கு உள்ளேயே எடப்பாடி அணியில் இருக்கும் மாஜி அமைச்சர் ஒருவர் உரையாடினார். இவர்கள் இருவரும் அருகருகே சென்று கிசுகிசுத்தபடி பேசினார். இதை கேட்டு அந்த ஓபிஎஸ் தரப்பு நிர்வாகியும் சிரித்தார். இவர்கள் இப்படி நெருக்கமாக இருந்ததை எடப்பாடி அணியும் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் இருந்தது. ஏன் மாஜி போய் அவரிடம் பேசினார்.. என்ன நடக்கிறது.. மாஜி ஓபிஎஸ் அணிக்கு சொல்கிறாரா அல்லது ஓபிஎஸ்ஸின் அந்த இடது கை எடப்பாடி அணிக்கு தாவ போகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக நிர்வாகிகள் இடையே இந்த குறிப்பிட்ட நிகழ்வு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications