நார்த் எதுக்கு? சென்னையை 'டிக்' அடித்த மத்திய அரசு! பறக்க தயாராகும் ஸ்ரீபெரும்புதூர்
சென்னை: சென்னையையடுத்த ஸ்ரீபெரும்புதூரில் ஆளில்லா விமான பயிற்சிக்கான சோதனை மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இதுபோன்ற பயிற்சிக்கான சோதனை மையம் அமைக்கப்படவில்லை. முதன் முறையாக தமிழ்நாட்டில் அமைய இருக்கிறது.
சர்வதேச நாடுகள், போர் விமானங்களை வாங்குவதை விடவும் ட்ரோன்களை வாங்குவதற்கும், அதை புதிய டிசைனில் வடிவமைப்பதற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. போர் விமானங்கள் செய்வதை விட நுட்பமான பணிகளை இந்த ட்ரோன்கள் செய்வதால் இப்படி அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. உளவு, தாக்குதல், தேடுதல், டெலிவரி என அனைத்திற்கும் இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதை மேம்படுத்திட இந்திய ராணுவம் தொடர்ந்து முயன்று வருகிறது.

அப்படி உருவாக்கப்பட்டதுதான் ஆளில்லா விமானங்கள். இந்த வகை விமானங்களை ரேடாரில் அடையாளம் காண்பது கடினம். எனவே உளவுக்கும் தாக்குதலுக்கும் இதை விட நல்ல ஆயுதம் வேறு எதுவும் கிடையாது. இந்தியாவை பொறுத்த அளவில் தொடக்கத்தில் வெளிநாடுகளின் உதவியோடு ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது நிலைமை மாறியிருக்கிறது. உள்நாட்டிலேயே இதனை உற்பத்தி செய்ய தொடங்கியிருக்கிறோம்.
எனவே இந்த ஆளில்ல விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதற்கேற்றாற்போல் இதை இயக்குபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளது. எனவே இதற்காக பயிற்சி சோதனை மையம் அமைக்க இடம் தேடப்பட்டு வந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வல்லம் வடகலில் சோதனை மையத்தை அமைக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 5 ஏக்கர் நிலத்தில் சோதனை மையத்தை அமைக்கலாம் என தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துடன் (டிட்கோ) இணைந்து கெல்ட்ரான் தலைமையிலான கூட்டமைப்பு இதற்கான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது.
இதனையடுத்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.50 கோடியில் இந்த மையத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை கட்டுப்பாட்டில் இந்த சோதனை மையம் அமைக்கப்படுகிறது. ட்ரோன்கள்தான் எதிர்கால நவீன போர் கருவிகள் என்கிற சூழலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆளில்லா விமான பயிற்சிக்கான சோதனை மையம் அமைய இருப்பது பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்டிருக்கும் ரஷ்யாவால் கூட, மிகச்சிறிய நாடான உக்ரைனின் ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள முடியவில்லை. அப்படியெனில் ட்ரோன் மற்றும், ஆளில்லா விமானங்களின் பலம் என்னவென்று இதிலிருந்து நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications