திருவள்ளுவரின் உடையில் காட்டிய ஆர்வத்தை! தமிழக மக்களின் உயிரில் காட்டாதது ஏன்? நயினார் கேள்வி
சென்னை: திருவள்ளுவரின் உடை விஷயத்தில் ஆர்வம் காட்டிய நீங்கள், தமிழக மக்களின் உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன் அருண்ராஜ்? என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருவள்ளுவரின் உடை விஷயத்தில் ஆர்வம் காட்டிய நீங்கள், தமிழக மக்களின் உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன் அருண்ராஜ்?

தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த தவெக நிர்வாகியான 19 வயது ஆகாஷ் என்பவருக்கு பாம்பு கடித்ததாகவும், சிகிச்சைக்காக அவரை வி.கே.புதூர் அரசு மருத்துவமனை, ஆலங்குளம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்ற போது கதவைக் கூட திறக்காமல் ஊழியர்கள் காட்டிய அலட்சியத்தால் ஆகாஷ் அநியாயமாக உயிரிழந்ததாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதறச் செய்கின்றன.
தமிழகத்தில் ஜோசப் விஜய்யின் தலைமையிலான அரசு அமைந்ததில் இருந்து, அரசு மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பொருட்படுத்தாமல், நீங்களும் உங்கள் முதல்வரும் திருவள்ளுவரின் மதத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பது வெட்கக்கேடு.
நீங்கள் சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற புதிதில், அரசு அமைச்சர்கள் எல்லாம் இனி அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெறுவோம் என வீராப்பாக வசனம் பேசினீர்களே, இதுவரை எத்தனை அமைச்சர்கள் எந்த அரசு மருத்துவமனையில் எம்மாதிரியான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டார்கள் என்ற அறிக்கையை வெளியிட முடியுமா?
அப்படி ஏதாவது ஒரு அமைச்சர் அரசு மருத்துவமனையின் பக்கம் தலை காட்டியிருந்தால் கூட, இந்நேரம் அவற்றின் தரம் ஓரளவு உயர்ந்திருக்கும். இனியாவது, எளிய மக்களின் உயிர்களை அலட்சியப்படுத்தாதீர்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் முறையான ஆய்வுகள் மேற்கொண்டு தரமான சிகிச்சைகளுக்கு வழிவகுங்கள்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அது போல் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பாஜக இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அப்போது பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், கும்முடிப்பூண்டி பச்சிளம் குழந்தை கொலைக்கு கஞ்சா போதை பொருட்கள் தான் அதற்கு காரணம். கடந்த திமுக அரசுக்கும், தவெக அரசுக்கும் வித்தியாசம் இல்லை. முதல்வர் தூக்கத்தில் இருந்து இன்னும் எழுந்திருக்கவில்லை. இவ்வாறு அவர் பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications