ஆபாசமாகும் கல்லூரி நிகழ்ச்சிகள்? செலிபிரிட்டியாக மாறும் Influencer! இதற்கு ஒரு End card இல்லையா?
சென்னை: சமூக வலைத்தளத்தில் மிக மோசமான பின்புலம் கொண்டவர்களைக் கல்லூரிகளுக்குச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
சமூகத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு உழைத்து வருபவர்களைத்தான் ஒரு காலத்தில் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக அழைப்பார்கள். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது.

யூடியூப்பில் 1000 பேர் Followers வைத்தால் அவர் செலிபிரிட்டி. அவருக்கு வேட்டு போட்டு அழைத்துப் போய் டான்ஸ் ஆட வைக்கிறார்கள். கூடவே கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் டான்ஸ் ஆடுகிறார்கள். அதைக் கல்லூரி நிர்வாகம் தனது யூடியூப் சானலில் வெளியிடுகிறது.
இதை எல்லாம் யாராவது சமூக அக்கறையோடு கேள்வி கேட்டால், அவர்களை 'பூமர் அங்கிள்' என்று கிண்டல் பண்ணுவார்கள். அப்படி இல்லை என்றால் மீம்ஸ் தயாரித்து சமூக வலைத்தளத்தில் அவரை ட்ரோல் செய்வார்கள். இதனால் பலர் 'நமக்கு ஏன்டா வம்பு?' என்று எந்தக் கருத்தையும் சொல்லாமல் மவுனமாகிவிடுகிறார்கள்
சமீபத்தில் அப்படித்தான் ரசிகனின் ரசிகன் மணி என்று இன்ஸ்டா Influencer ஒருவரைக் கல்லூரிக்கு சீப் கெஸ்ட் ஆக அழைத்தது ஒரு கல்லூரி நிர்வாகம். அந்த 'மகான்' ரகனின் ரசிகனும் கல்லூரிக்குப் போய் தென்னாப்பிரிக்கா தலைவர் நெல்சன் மண்டேலா முதல் மகாத்மா வரை கரைத்துக் குடித்துப் பேசி இருப்பார் என்று பார்த்தால், அப்படி ஒன்றுமே இல்லை.
அவரது அறிவாற்றலால் மாணவிகளைக் கட்டிப் போட்டு இழுத்த அவரை, கல்லூரிக்குள் உள்ளே அழைத்துப் போவதற்கு போதுமடாசாமி என்று ஆகிவிட்டது. அவ்வளவு தள்ளுமுள்ளு. அவ்வளவு நெரிசல். அத்தனை கல்லூரி மாணவிகளும் அவரது ரசிகைகள். நினைத்தாலே வேதனையாக இருக்கிறது.

இந்த ரசிகனின் ரசிகன் யூடியூப் சானலை கிட்டத்தட்ட 3 மில்லியன் பேர் Followers ஆக இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் அவர் 1 மில்லியன் தொட்டதை வேட்டு போட்டுக் கொண்டாடி இருக்கிறார்.
இவரைக் கல்லூரிக்கு அழைத்த போது அது சர்ச்சையானது. அதன்பின்னர் அவர் பற்றிய ஒரு தரக்குறைவான வீடியோ வெளியானது. அதில் உள்ளது நான் இல்லை என்று அவர் மறுத்துள்ளார்.
மேற்கொண்டு சில விளக்கங்களை அளித்துள்ளார். அதில் அவர் இந்தளவுக்கு சீரியசான விசயத்திற்குப் பதிலளிக்கும் போது, 'என் பொருளைப் பார்க்க இத்தனைப் பேர் அலையுறீங்களா?' என்று தெனாவட்டாக பேசுகிறார்.
பிரச்சினை இவர் மீது இல்லை. இவரைப் பின் தொடரும் அந்த 3 மில்லியன் அரைவேக்காடுகள் குறித்துத்தான். தமிழ்நாட்டில் ஒரு செய்தி நிறுவனமே 1 மில்லியன் Followers ரீச் செய்வதற்குள் நாக்குத் தள்ளிவிடுகிறது.
அதே நல்ல மனசுடன் நாட்டுக்கு நல்ல செய்திகளை வழங்க வேண்டும் என்பதற்காகப் பல தனிப்பட்ட பத்திரிகையாளர்கள் தரமான சானல்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். அறிவியல், வரலாறு, ட்ராவல் என்று தமிழில் மிகச் சிறப்பான யூடியூப் சானல்கள் இயங்கி வருகின்றன.
அவர்கள் எல்லா 5 லட்சத்தை எட்டியிருந்தால் அது மாபெரும் சாதனை. ஆனால், வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு கடலை போடும் ஒரு நபரைக் கல்லூரிக்கு அழைப்பதுடன் கிட்டத்தட்ட 3 மில்லியன் நபர்கள் அவரை ஆதரிக்கிறார்கள் என்பது வேதனையா சாதனையா?
ஒரு காலத்தில் திரைத்துறையில் மைக் மோகன் தொடங்கி முரளி, மாதவன், அப்பாஸ்,அரவிந்த்சாமி வரை பெண் ரசிகர்களை அதிகம் ஈர்த்து வந்தனர். அந்தத் தலைமையையே பலரும் விமர்சித்து வந்தனர்.

ஆனால், இன்று தரக்குறைவாகப் பேசுவோரை, தரக்குறைவாக வீடியோ வெளியிடுபவர்கள் எல்லாம் செலிபிரிட்டியாக உயர்ந்திருப்பது நாட்டுக்கு நல்லதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
ஒரு காலத்தில் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்ட விஜபிகள் யார் தெரியுமா? அண்ணாதுரையைப் பச்சையப்பன் கல்லூரிக்கு அழைத்துப் பேச வைத்தார்கள். பாரதிதாசனை அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு அழைத்துப் பேச வைத்தார்கள்.
இப்படி வலம்புரி ஜான் தொடங்கி சுகிசிவம் வரை தமிழ்நாட்டில் கல்லூரிகளுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டனர். இதற்கு அடுத்த தலைமுறை தன்னம்பிக்கை பேச்சாளர் எம்.எஸ் உதயமூர்த்தி அழைத்து மேடையை அழகுபடுத்தியது. அதைப்போல இறையன்பு தொடங்கி பலர் கல்லூரி மேடைகளை அறிவு மிக்கதாக மாற்றினர்.
ஆனால், இன்று இன்ஸ்டா பிரபலம் என்று எந்த அறிவு முதிர்ச்சியும் இல்லாதவர்களை அழைத்து அழகு பார்க்கிறது ஒரு தலைமுறை. அரசியல் அறிவு விருது பரிமாறப்பட்ட அவையில் இன்று ஆபாசம் பரிமாறப்படுகிறது.
ஆயிரம் லைக்ஸ், ஆயிரம் கமெண்ட் இருந்தால் அவர் செலிபிரிட்டி என்றால்? நாடு என்ன ஆவது? இதற்காக உழைத்த தலைவர்களின் புகழ் என்ன ஆவது?
இது பற்றி கவலை தெரிவித்துள்ள பத்திரிகையாளர் அந்தணன், "கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக ஒருவரை அழைக்கிறார்கள் என்றால், அவரைப் பற்றிய பின்புலம் என்ன என்பதை எல்லாம் விசாரிக்க வேண்டாமா? இப்படிப் பற்றி ஒருவரைக் கல்லூரிக்கு மாணவிகள் விரும்பி அழைக்கிறார்கள் என்றால் அவர்களின் ரசனையே மக்கி மண்ணாகப் போய்விட்டதோ என்று வருந்தப்பட வேண்டி உள்ளது" என்கிறார்.
இந்த சிக்கலைக் கல்லூரிகள் மட்டும் சந்திக்கவில்லை. தேர்தல் காலங்களில் சில அரசியல் தலைவர்கள் கூட இந்த அரைவேக்காட்டுச் செல்வாக்கு செலுத்துபவர்களை (Influencer) அழைத்து விருந்து வைக்கிறார்கள். இவர்கள் வழியில் ஓட்டு வேட்டை நடத்துகிறார்கள்.
இதை எல்லாம் காலக் கொடுமை என்று சொன்னால் தப்பே இல்லை!












Click it and Unblock the Notifications