ஆதார் கார்டு.. மீண்டும் சூப்பர் அறிவிப்பு.. பள்ளி மாணவர்கள் இதை செய்தாலே போதும்.. தமிழக அரசு அதிரடி
சென்னை: பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் அட்டை புதிதாக பதிவுசெய்வது, புதுப்பிப்பது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, கிட்டத்தட்ட 37000-ம் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.. இந்த பள்ளிகளில் 50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து வருகிறார்கள்.

வருகை பதிவு: அரசுப்பள்ளியை தவிர, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் சேர்க்கை "எமிஸ்" தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் மாணவர்கள் பெற்றோர் விவரங்கள், முகவரி, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
ஆனால் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலருக்கோ, ஆதார் அட்டையே கிடையாது.. அரசு திட்டங்களை பெற வேண்டுமானாலும் சரி, உயர்கல்விக்கான உதவித்தொகை பெற வேண்டுமானாலும் சரி, வங்கி கணக்கு ஆரம்பிக்க வேண்டுமானாலும் சரி, ஆதார் எண்தான் அடிப்படையாக தேவைப்படுகிறது. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கு திட்டங்களை செயல்படுத்தவும் அவர்களுக்கான விபரங்களை பெறுவதற்கும் ஆதார் கட்டாயமாகும்.
சிறப்பு முகாம்கள்: அதனால்தான், ஆதார் இல்லாத மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 23 முதல் பள்ளிகளில் இதற்கான சிறப்பு முகாம்கள் துவங்கியிருக்கின்றன. ஆதார் பெறுவதற்கு சேவை மையங்களுக்கு செல்வதை தவிர்க்கும் வகையில், எல்காட் நிறுவனம் மூலம் நேற்றிலிருந்து பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதனை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்திருந்தார்.
இந்நிலையில், பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் அட்டை புதிதாக பதிவுசெய்வது, புதுப்பிப்பது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. பள்ளிக்கல்விதுறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் உள்ளதாவது:
ஆதார் அட்டைகள்: "ஆதார் மையங்கள் உருவாக்குவது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவி மற்றும் ஊக்கத் தொகைகள், பயனாளர்களின் வங்கி கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.
இதற்கு மாணவர்களுக்கு வங்கி கணக்கு கட்டாயம் தேவை. புதிய வங்கிகணக்கு தொடங்க ஆதார் எண் அவசியமாகிறது எனவே, அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் ஆதார் அட்டை வழங்குவது அவசியம்.
கை ரேகைகள்: பள்ளிகளில் ஆதார் பதிவை பொறுத்தவரை, 5 வயது வரையிலான புதிய பதிவுகளை பெற்றோரின் ஆதார் விவரங்கள், கைரேகை அங்கீகாரத்துடன் பள்ளிகளிலேயே பதிவு செய்யலாம். குழந்தைகள் 5 வயதை அடைந்த பிறகு பயோமெட்ரிக் தகவல்களை பதிவு செய்யவேண்டும்.
15 வயதுக்கு பிறகு நிலையான பயோமெட்ரிக் தகவல்களை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும். இப்பணிகளையும் பள்ளிகளில் மேற்கொள்ளலாம். அதேபோல, பிறந்தது முதல் பதிவு செய்யாத 7-15 வயது பிள்ளைகளுக்கான பதிவுகளையும் பள்ளியிலேயே மேற்கொள்ளலாம் என திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு அதிகாரி: அந்த வகையில், ஆதார் பதிவாளராக மாநில திட்ட இயக்குநர் செயல்படுவார். மாவட்ட திட்ட அலுவலகத்தில் உள்ள உதவிதிட்ட அலுவலர் பொறுப்பு அதிகாரியாக செயல்படுவார். ஆதார் தரவு உள்ளீட்டாளர் பள்ளிக்கு செல்லும் முன்பு, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் மூலம் தலைமை ஆசிரியர், முதல்வர்களுக்கு தகவல் தெரிவிப்பார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனது வட்டாரத்தில் நடைபெறும் ஆதார் தொடர்பான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைப்பார். பள்ளிகளில் ஆதார் எண் பெறப்பட்டதும் அதை எமிஸ் தளத்தில் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்வது இவரது பொறுப்பு.
எல்காட்: வட்டார அளவில் அனைத்து பள்ளிகளிலும் ஆதார் பதிவு, புதுப்பித்தல் பணி தொய்வின்றி நடைபெற திட்டம் வகுப்பது வட்டார கல்வி அலுவலரின் பணி. பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆதார் பதிவு, புதுப்பித்தல் மேற்கொள்வதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆதார் பதிவு மேற்கொள்ளும் முகமையாக எல்காட் நிறுவனம் செயல்படும்" என்று அறிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications