Aadhaar Card: அடியோடு மாறப்போகுது ஆதார் கார்டு.. இனி போட்டோ + கியூஆர் கோடு மட்டும்தான் இருக்குமா?
சென்னை: ஆதார் கார்டு விவரங்கள் மூன்றாம் நபருக்கு செல்வதை தடுக்கவும், பயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கும் விதமாகவும் ஆதார் கார்டுகளில் மேஜர் மாற்றம் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆதார் ஆணையம் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது திட்டமிடப்பட்டு இருக்கிற மாற்றத்தால் ஆதார் கார்டின் வடிவமே மொத்தமாக மாறலாம் என்கிறார்கள்.. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
ஆதார் என்பது தற்போது தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக உள்ளது. ஆதார் அடையாள ஆவணத்தில் தற்போது 12 இலக்க எண்கள், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஆதார் கார்டை பொறுத்தவரை சிம்கார்டு முதல் நிதி சார்ந்த சேவைகள், அரசின் நலத்திட்டங்கள் ஆகியவை பெறுவதற்கு பிரதான ஆவணமாக கேட்கப்படுகிறது.

இதனால், இந்த கார்டை வைத்து பல்வேறு மோசடிகளும் நடைபெறுகின்றன. தனியார் அமைப்புகள், நிறுவனங்களிடம் கூட ஒருவரின் ஆதார் விவரங்கள் எளிதாக கிடைக்கின்றன. இதனால், ஆதாரின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கேள்விக்குள்ளாகியுள்ளது. எனவே ஆதாரின் தனியுரிமையை உறுதி செய்யும் விதமாக ஆதார் கார்டில் மேஜர் மாற்றங்களை கொண்டு வர ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டிசம்பருக்குள் ஆதார் கார்டு மொத்தமாக மாறப்போகும் என்று சொல்லப்படுகிறது. அப்படி என்னதான் மாறும் என்பது பற்றிய விவரங்கள் பார்க்கலாம்.
புதிய ஆதார் அட்டை எப்படி இருக்கும்?
அட்டையில் கீழ்க்கண்ட விவரங்கள் மட்டுமே தெரியும்:
* புகைப்படம்
* க்யூஆர் கோடு
பழைய ஆதார் அட்டையில் இருந்த கீழ்க்கண்ட விவரங்கள் இனி வெளிப்படையாக இருக்காது:
* பெயர்
* ஆதார் எண்
* முகவரி
* பிறந்த தேதி
* பாலினம்
இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், பயனர் ஒருவரின் எந்த ஒரு தனிப்பட்ட தகவலும் அட்டையில் அச்சிடப்படாது. அனைத்து விவகரங்களும் கியூ ஆர் கோடில் மட்டுமே இருக்கும்.
கியூ ஆர் கோடில் என்ன இருக்கும்?
புதிய ஆதார் அட்டையின் க்யூஆர் கோடில் கீழ்க்கண்ட விவரங்கள் இடம்பெறும்:
பெயர்
ஆதார் எண்
பிறந்த தேதி
முகவரி
பாலினம்
கியூஆர் கோடை யார் அணுக முடியும்?
* அரசு அங்கீகரித்த ஸ்கேனர்கள்
* UIDAI-யின் அதிகாரப்பூர்வ செயலிகள்
* வெரிபிகேஷன் கருவிகள்
ஹோட்டல்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அலுவலகங்கள் மற்றும் தனிநபர்கள் என யாரும் ஆதார் கார்டை புகைப்பட நகல் எடுத்தாலும் எந்த தனிப்பட்ட விவரங்களையும் பார்க்க முடியாது.
ஏன் இந்த மாற்றம் கொண்டு வர திட்டம்?
தனியுரிமை பாதுகாப்பு: ஆதார் கார்டு விவரங்களை பெறும் தனியார் நிறுவனங்கள், ஹோட்டல்கள், சிம்கார்டு சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவை இந்த தரவுகளை கசியவிட வாய்ப்பு உள்ளன. பயனர்களின் தரவுகள் பொதுவெளியில் இப்படி தெரிந்தால் இதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. ஆனால் தற்போது கொண்டு வர திட்டமிட்டு இருக்கிற புதிய ஆதாருக்கு அதற்கான வாய்ப்பே இல்லை.
* ஆதார் தரவுகளை தவறாக பயன்படுத்துவது ஏறத்தாழ முற்றிலும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* ஆதார் கார்டில் மேற்கண்ட மாற்றங்கள் அமலுக்கு வந்த பிறகு, யாருக்கு வேண்டுமனானாலும் ஆதார் நகலை அளிக்கலாம். ஏனெனில், ஆதாரில் பிரிண்ட் செய்யப்பட்டு எந்த விவரங்களும் இருக்காது.
* உங்களின் தனிப்பட்ட விவரங்களை யாராலும் பார்க்க முடியாது. டிஜிட்டல் வெரிபிகேஷன் மட்டுமே செய்ய முடியும். கியூ ஆர் கோட் ஸ்கேன் செய்தால் மட்டுமே டேடாவை பார்க்க முடியும் என்பதால் ஒருவரின் தனிப்பட்ட விவரங்கள் 100 சதவீதம் உறுதி செய்யப்படும்.
எனினும், தற்போது வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் இது தொடர்பாக வெளியாகவில்லை. எனினும், சமீபத்தில் அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு ஒன்றில் புதிய ஆதார் செயலியில் மேம்பட்ட அம்சங்கள் இருப்பதாகவும், கியூஆர் கோடு அடிப்படையிலான கார்டு குறித்த விவரமும் இடம் பெற்று இருந்தது. எனவே, ஆதாரில் பாதுகாப்பை மேம்படுத்த கியூஆர் கோடு அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சமீப நாட்களாக பல்வேறு தரவுகள் பகிரப்பட்டு வருகின்றன.














Click it and Unblock the Notifications