ஆதார் தகவல்களை திருடியதா புதுச்சேரி பாஜக? ஐகோர்ட்டில் ஆதார் ஆணையம் விளக்கம்
சென்னை: புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஆதார் தகவல்களை பாஜக திருடவில்லை என்று ஆதார் ஆணையம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாட்டுடன் இணைந்து புதுச்சேரியிலும் சட்டசபை தேர்தல் அடுத்த வாரம் நடைபெறுகிறது. தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர பல்வேறு கட்சிகளும் பல யுக்திகளைக் கடைப்பிடித்து வருகின்றன.

அதிலும் தற்போது கொரோனா காலம் என்பதால் மக்களை நேரடியாகச் சந்தித்து பிரசாரங்களை மேற்கொள்வதில் அரசியல் கட்சிகளுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதைத் தாண்டி பிரசாரத்தை மேற்கொள்ளப் பாடல்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன.
அதன்படி புதுச்சேரியில் பாஜகவில் இணையும்படியும் பாஜகவிற்கு வாக்களிக்கும்படியும் அங்குள்ள மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் விவரங்களைப் பெற்று, பாஜக பிரச்சாரம் செய்வதாக ஆனந்த் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் இன்று பதிலளித்திருந்த ஆதார் ஆணையம், பாஜகவுக்கு எவ்வித தகவல்களையும் அளிக்கவில்லை என்றும் அதார் தகவல்களையும் யாரும் திருடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விஷயத்தில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளவில்லை என்றும் ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ள பாஜக, கட்சியினர் நீண்ட காலமாகச் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மெசேஞ்கள் அனுப்பப்பட்டதாகப் பதில் அளித்தது. இருப்பினும், எவ்வாறாயினும், தேர்தல் காலம் என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன் தேர்தல் ஆணையத்திடம் பாஜக அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
தேர்தல்களை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த அனைத்து கட்சிகளுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை ஏப்ரல் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications