பச்சை பால் விற்பனை சர்ச்சை.. முற்றுப்புள்ளி வைத்த ஆவின் நிர்வாகம்
சென்னை: ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டின் பாலின் அளவைக் குறைத்து விலையை உயர்த்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பச்சை பால் விற்பனையை குறைக்கவோ, உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனமான ஆவின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் மிகவும் குறைந்த விலையில், சத்து நிறைந்த பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் மட்டுமல்லாமல் பால் சார்ந்த அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் பச்சை உறை பாலில் உள்ள அதே 4.5 சதவீதம் கொழுப்புச் சத்து, அதே 9 சதவீத கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் கொண்ட பாலை ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பெயரில் திருச்சி மண்டலத்தில் ஆவின் அறிமுகம் செய்துள்ளது. கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ. 44 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ. 50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலின் விலையை மறைமுகமாக உயர்த்தும் ஆவின் நிறுவனத்தின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் பலமுறை பால் மற்றும் பால் பொருட்களின் விலையை தொடர்ந்து திமுகவினர் உயர்த்தி வருவதாகவும், பெயரை மட்டும் மாற்றிவிட்டு விலையை உயர்த்துவது, எடையைக் குறைப்பது முற்றிலும் தவறான என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிவையில், ஆவின் பச்சை நிற பால் பாக்கெட்டின் அளவைக் குறைத்தும், விலையை உயர்த்தியும், உற்பத்தியை நிறுத்தவும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆவின் நிறுவனம் நிலைப்படுத்தப்பட்ட பாலின் (பச்சை நிற பால்) விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.
மக்கள் நலன் கருதி, எதிர்வரும் பால் தேவையை கருத்தில் கொண்டும் மற்றும் பால் சந்தையில் அனைவரும் விரும்பும் வகையில் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துக்களை சற்று உயர்த்தி புதிய வகையான பாலினை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பொது மக்களிடம் கருத்துகளையும் கேட்கப்பட உள்ளது. மேலும் எந்த விதமான புதிய வகை பாலையும் இதுவரை ஆவின் விற்பனை செய்ய தொடங்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆவின் நிறுவனம் புதிய வகையான பால் வகைகளை விற்பனை தொடங்கும் பட்சத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் தெரிவித்த பின்னரே தொடங்கப்படும் என்று தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications