தடபுடலாக களம் இறங்கும் ஏசிஎஸ்.. விஜயகாந்த்துடன் சந்திப்பு.. பிரச்சாரத்திற்கு யார் வர போறாங்களோ
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேரில் சந்தித்து பேசினார் ஏசி சண்முகம்
Recommended Video
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் நேரில் சந்தித்து பேசி உள்ளார். ஏசி சண்முகம் விஜயகாந்த்தை சந்தித்த செய்தியை கேட்டவுடனேயே வேலூர் தொகுதி மக்கள் வெலவெலத்து போய்விட்டார்கள்.
இப்படித்தான் கடந்த முறை வேலூர் தொகுதியில் ஏசி சண்முகம் வேட்பாளர் என்பதால், விஜயகாந்த்தை அவரது கட்சி ஆபீசில் சென்று சந்தித்து, தமக்கு ஆதரவு தரும்படி கேட்டு கொண்டார்.
ஆனால் விஜயகாந்த்தால் நேரில் சென்று பிரச்சாரம் செய்ய முடியவில்லை. ஆனால் நேரில் அழைப்பு விடுத்ததாலும், கூட்டணி கட்சி என்ற முறையிலும் தேமுதிக சார்பில் அவரது மகன் சண்முக பாண்டியன் சென்றார். மைக்கை பிடித்து பேசியவர் ஏசி சண்முகத்துக்கு வாக்கு கேட்டதைவிட, திமுக தரப்பை திட்டி விட்டு வந்ததுதான் அதிகம்.
முட்டாள்
"விஜயகாந்தை தொட்டால் பிரச்சினை என்றேன். தேவையில்லாமல் துரைமுருகன் அவரை சீண்டி பார்த்துட்டார். விளைவை இப்போது தெரிந்து கொண்டிருப்பார். இப்போ வசமா மாட்டிக்கிட்டீங்க. எதை எடுத்தாலும் எதிர்க்கிறதே ஸ்டாலினின் வேலை. அவர் ஒரு உளறும் புகார் பெட்டி. எதை எடுத்தாலும் எதிர்த்தால் அவர்கள் முட்டாள்" என்று வயசுக்கும், அனுபவத்துக்கும் மீறி பேசிவிட்டு வந்தார்.
வந்ததே லேட்டு
இதன்பிறகு பிரேமலதா இதே வேலூர் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போனார். ஏசி சண்முகத்துக்காக வாக்கு சேகரிக்க போகிறார் என்றதும், மக்கள் திரண்டு வந்துவிட்டனர். ஆனால் அன்றைய தினம் ராத்திரி 10.15 மணிக்கு தான் ஏசி சண்முகத்துடன் வந்தார் பிரேமலதா. 10 மணியோட பிரச்சாரம் டைம் முடிந்துவிட்டது. அதற்கு மேல் பேசினால் விதிமீறல் என்பதால் கைகளை உயர்த்தி உயர்த்தி இரட்டை விரலை காட்டி சைகை மூலம் வாக்கு கேட்டார். காத்திருந்து நொந்து போன மக்களும் பதிலுக்கு விரலை காட்டினார்கள்.
மரியாதை நிமித்தம்
இப்போது திரும்பவும் விஜயகாந்தை சந்தித்துள்ளார் ஏசி சண்முகம். மரியாதை நிமித்தமான சந்திப்பு இது என்று சொல்லப்பட்டாலும், எப்படியும் ஆதரவு கேட்டிருப்பார். வேலூர் தொகுதியை பொறுத்தவரை பிரேமலதாவின் சொந்த தொகுதி.
பிரேமலதா
ஆம்பூர், வேலூர், போன்ற வட மாவட்டங்களில் தேமுதிகவுக்கு ஓரளவு வாக்கு வங்கியும் உள்ளது. இந்த வாக்குகளை தன்வசமாக்கவும், கூட்டணியில் உள்ள கட்சி என்ற முறையிலும் விஜயகாந்த்தை சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார் ஏசி சண்முகம். எப்படியும் விஜயகாந்த்தால் பிரச்சாரத்துக்கு போக முடியாது. ஒருவேளை இந்த முறையும் பிரேமலதா செல்வாரா.. பிரேமலதா சென்றாலும் பரவாயில்லை, அவரது மகன் சென்றுவிடுவாரோ என்ற கலக்கம் இப்போதே ஏற்பட்டு விட்டது.
பிரச்சாரம்
இருப்பினும் பாமக மற்றும் அதிமுகவின் அசுர பலம் முழுமையாக ஏசிஎஸ்ஸுக்காக களம் இறக்கப்படும் என்பதாலும், அதிமுக இதை தனது பிரஸ்டிஜ் இஷ்யூவாக எடுத்துக் கொள்ள நேரிடும் என்பதாலும் ஏசி சண்முகம் பெருத்த தெம்புடன் களம் காண இறங்கி விட்டதாக சொல்கிறார்கள். மறுபக்கம் திமுக தரப்பு இன்னும் பிரச்சாரத்திற்குக் கிளம்பாமல் உள்ளது. ஆனால் வெற்றி கவுரவப் பிரச்சினை என்பதால் திமுகவும் அதிரடிகாட்டும் என்றும் சொல்கிறார்கள்.