தேர்தல் நாளில் ஓட்டு போட லீவ் தரலயா? இந்த எண்ணில் புகார் சொன்னால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும்!
சென்னை: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நாள் அன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை ஆணையர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

சத்யபிரதா சாகு எச்சரிக்கை: தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அன்று கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை ஆணையர் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
1950 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்: இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, "தேர்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்கும். தேர்தல் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை வழங்கப்படவில்லை என தெரிந்தால், அதற்கு முந்தைய நாளான 18ஆம் தேதியே புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விடுமுறை அளிக்காத நிறுவனங்களின் ஊழியர்கள் 1950 என்ற தேர்தல் ஆணையத்தின் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம்." என்றார்.
நாளையுடன் தபால் வாக்கு க்ளோஸ்: மேலும் பேசிய சத்யபிரதா சாகு, "தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை வரும் 17-ம் தேதி மாலையுடன் நிறைவடையும். பூத் சிலிப் வழங்கும் பணி 92.80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. நாளை மாலையுடன் பூத் சிலிப் கொடுக்கும் பணியும் நிறைவடையும். பூத் சிலிப் கிடைக்காதவர்கள் ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூத் ஸ்லிப் கிடைக்கவில்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம்.
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான மையங்களில் நாளை ஒரு நாள் தபால் வாக்கு அளிக்கலாம். தபால் வாக்கு நாளையுடன் நிறைவடைகிறது. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தபால் வாக்குகளை தபால் மூலமாக அனுப்ப முடியாது. இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரை மேற்கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications