நான் சேரியில் பிறக்கலை.. வாய்க்கொழுப்பு பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த சர்ச்சை நடிகர் அர்ணவ்!
சென்னை: தான் ஒன்றும் சேரியில் பிறக்கலை என திமிருடன் பேட்டி கொடுத்த சர்ச்சைக்குரிய நடிகர் அர்ணவ் இப்போது தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகர் அர்ணவ்.. பெண்களின் வாழ்க்கையில் விளையாடியதற்காக அண்மைகால செய்திகளில் பேசு பொருளாகி இருக்கிறார். சின்னத்திரையில் மட்டும் சீரியல்களில் நடித்து பெயர் வாங்கிய அர்ணவ், நடிகைகளின் வாழ்க்கையில் விளையாடி வருகிறார் என்பதுதான் புகார்கள்.
நடிகர் அர்ணவ்வின் மனைவியான நடிகை திவ்யா போலீசில் கொடுத்த புகார் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது. கர்ப்பிணி என்றும் பார்க்காமல் தம்மை அடித்து உதைத்து அர்ணவ் சித்ரவதை செய்தார் என்பதும் புகார். என்னை கட்டாய மதமாற்றம் செய்தார் அர்ணவ் என்பதும் திவ்யாவின் புகார்.இது தொடர்பாக அர்ணவ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த கட்ட நடவடிக்கைகள் பாய இருக்கின்றன.

மனைவி மீது புகார்
இந்நிலையில்தான் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் அர்ணவ். அப்போது பேசுகையில், மனைவியும் நடிகையுமான திவ்யாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். குழந்தை பிறந்த பின்னர்தான் திவ்யாவுக்கு சிகிச்சை அளிக்க போகிறோம் என்றும் கூறினார்.

சேரியில் பிறக்கவில்லை பேச்சு
அத்துடன் நடிகர் அர்ணவ் நின்றிருந்தால் கூட பிரச்சனை இல்லை. இந்த செய்தியாளர் சந்திப்பில், நண்பர் ஈஸ்வர் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம். குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்திய ஈஸ்வர் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தினார். நான் சேரியில் பிறக்கவில்லை.. அவரும் சேரியில் பிறக்கவில்லை..ஆனாலும் கொச்சையான வார்த்தைகளை ஏன் பேசினார் என தெரியவில்லை என அசால்ட்டாக கூறினார் அர்ணவ்.

இழிமனிதர்களாக சித்தரிப்பு
அதாவது சேரி என்ற பகுதியில் வாழும் மக்கள்தான் கொச்சையான வார்த்தைகளை பேசுகின்றனர் என ஜாதிய திமிருடன் அர்ணவ் இக்கருத்தை கூறியிருந்தார். அர்ணவ்வின் இந்த உடல்மொழியும் பேச்சு மொழியும் கடும் எதிர்ப்பை உருவாக்கின. சேரியில் வாழும் ஜாதியினரும் சக மனிதர்தான் என்பதை உணராமல், அவர்களை இழிமனிதர்களைப் போல அர்ணவ் பேசிய பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. நடிகர் அர்ணவ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

வருத்தம் தெரிவிப்பு
இதனைத் தொடர்ந்து நடிகர் அர்ணவ் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தாம் தெரிவித்த கருத்துகள் யாரையும் புண்படுத்துவதற்கானது அல்ல; அப்படி யாரையும் புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார் அர்ணவ். இருந்தபோதும் அர்ணவ் மீது வரிசையான புகார்கள் கொடுக்கப்பட்டால் அவர் எஸ்சி- எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications