நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம்
சென்னை: நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவருக்குக் கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்குகள் நடந்த நிலையில், இது தொடர்பாகப் பலரும் சம்பந்தமே இல்லாமல் விமர்சித்து வந்தனர். இதற்கிடையே அவர்களின் பொட்டில் அறைந்தார் போல பிரகாஷ் ராஜ் நறுக் பதிலைக் கொடுத்திருக்கிறார். அவரது பதில் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
தமிழ் மட்டுமின்றி பல்வேறு இந்திய மொழிகளிலும் டாப் ஸ்டாராக விளங்குபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். 1990களில் தமிழ் சினிமாவுக்கு வந்த பிரகாஷ் ராஜ், சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக முக்கிய நடிகராக இருக்கிறார். இவர் நடித்துள்ள பல்வேறு கதாபாத்திரங்கள் காலம் கடந்து நிற்பவையாகவே உள்ளது.

பிரகாஷ் ராஜ் தாயார்
இதற்கிடையே பிரகாஷ் ராஜின் தாயார் சுவர்ணலதா கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். அவருக்கு வயது 86.. சில காலமாகவே வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த சுவர்ணலதா, கடந்த திங்கள்கிழமை பிரகாஷ் ராஜ் இல்லத்திலேயே காலமானார். அவருக்கு அங்குக் கிறிஸ்துவ முறைப்படி இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.
நெட்டிசன்கள்
இதற்கிடையே நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னை நாத்திகவாதி என்றும் கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவன் என்றும் சொல்லி வரும் சூழலில், தனது தாய்க்கு மட்டும் இறுதிச் சடங்கை நடத்தியுள்ளதாகச் சொல்லி இணையத்தில் சிலர் கேள்வி எழுப்பினர். மேலும், அவர் தனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பது குறித்துப் பேசும் பழைய வீடியோவையும் இறுதிச் சடங்கில் பங்கேற்ற வீடியோவையும் சேர்த்து சிலர் சம்பந்தமே இல்லாமல் பகிர்ந்து வந்தனர். இது இணையத்தில் பேசுபொருளான நிலையில், பிரகாஷ் ராஜ் அத்தனை கேள்விகளுக்கும் பொளேர் பதிலை அளித்துள்ளார்.
பழைய வீடியோ
அதாவது பழைய நேர்காணல் ஒன்றில் பிரகாஷ் தனது தனது மத நம்பிக்கைகள் குறித்த வெளிப்படையாகப் பேசியிருப்பார். அந்த பேட்டியில் அவர், "நான் கடவுளை நம்புவதில்லை. எனக்கு அதற்கு நேரமும் இல்லை. ஒருவர் இது குறித்து என்னிடம் கேட்டபோது, எனக்கு நேரம் இல்லை என்று சொன்னேன். கடவுள் இருக்கிறார் என்று சொல்ல, நீங்கள் நம்பினால் போதும். நம்பிக்கை போதும். இல்லை என்று சொல்ல நிறைய அறிவு தேவை. எனக்கு அதெல்லாம் யோசிக்க நேரம் இல்லை. நான் இந்தப் பூமியில் எனது சக மனிதர்களுக்காக மட்டுமே வாழ்கிறேன். அப்படி கடவுள் என ஒருவன் இருந்தால், அவன் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறான்" என்றார்.
இந்த பேட்டியை வைத்தே பிரகாஷ் ராஜிடம் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கிடையே தனது தாயின் மத நம்பிக்கைகளின்படியே இறுதிச் சடங்கு நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். பிரகாஷ் ராஜ் தாயார் சுவர்ணலதா கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றியவர் என்பதால், கிறிஸ்துவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டார். இந்தச் சடங்கின் படங்கள் இணையத்தில் வெளியானதும், ட்விட்டர் தளத்தில் சிலர் பிரகாஷ் ராஜின் நாத்திக நிலைப்பாட்டைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பினர்.
பதிலடி
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பிரகாஷ் ராஜ், தனது எக்ஸ் பக்கத்தில், "ஆம், நான் கடவுளை நம்புவதில்லை... ஆனால் என் அம்மா அவருடைய இறைவனை நம்பினார். அவரது நம்பிக்கையின்படி அவரைப் புதைக்கும் உரிமையை நான் எப்படி மறுக்க முடியும்? இது நாம் ஒருவருக்கொருவர் தரும் அடிப்படை மரியாதை. வெறுப்பை உமிழும் அரக்கர்கள் இதைப் புரிந்து கொள்வார்களா?" என்று பதிவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications