அரசியல் என்ட்ரி.. திடீரென பரபரப்பை கிளப்பி சட்டென நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்!
சென்னை: எதிர்காலத்தில் அரசியலுக்கு வரப்போகிறேனா? இல்லையா? என பரபரப்பான பேட்டி கொடுத்த சிறிது நேரத்திலேயே எதிர்காலத்தில் தாம் அரசியலுக்கு தாம் வரப்போவதில்லை; அரசியலுக்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுகிறது என அறிவித்து நீண்டகால யூகங்களுக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரஜினிகாந்த்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்து தமிழகத்தில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) திட்டமிட்டிருந்தது. ரஜினிகாந்தும் அரசியலுக்கு வருவேன்; தேர்தலில் போட்டியிடுவோம் என்றெல்லாம் அறிவித்து கொண்டே இருந்தார்.
ரஜினிகாந்த் கட்சியில் அவர் சேருகிறார்; இவர் சேருகிறார் என ஏகப்பட்ட யூகங்கள் வலம் வந்து கொண்டிருந்தன. தமிழக பாஜகவும் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதை காரணம் காட்டி அதிமுகவிடம் 100 தொகுதிகள் வரை கேட்டுக் கொண்டிருந்தது.

அரசியலுக்கு குட்பை
ஆனால் திடீரென கொரோனா பாதிப்பு; உடல்நலன் பிரச்சனை என சாக்குபோக்கு சொல்லி அரசியலுக்கு தாம் வரப்போவதில்லை; தனிக்கட்சி தொடங்கப் போவது இல்லை என அறிவித்தார் ரஜினிகாந்த். இதனால் பாஜக கடுமையான ஏமாற்றத்தை எதிர்கொண்டது. அதேநேரத்தில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் கொத்து கொத்தாக திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர்.

ரஜினிகாந்த் பிஸி
ரஜினிகாந்தும் இதைப்பற்றி கவலைப்படாமல் அண்ணாத்தே படப்பிடிப்புக்கு போனார். பின்னர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். இப்போது அண்ணாத்தே படம் வெளியாகும் நிலையில் தமது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார் ரஜினிகாந்த்.

அரசியல் பேச்சு
இந்த கூட்டத்துக்கு முன்னதாக ரஜினிகாந்த் கொடுத்த பேட்டி மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டது. அந்த பேட்டியில், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருகிறேனா? இல்லையா? என்பதை மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்துவிட்டு உங்களிடம் சொல்கிறேன் என கூறினார் ரஜினிகாந்த்.

ரஜினியின் திட்டம் என்ன?
அப்படியானால் மீண்டும் அரசியல் முயற்சிகளை ரஜினிகாந்த் மேற்கொள்கிறாரா? அல்லது ரஜினிகாந்தை களமிறக்கியே தீருவது என பாஜக நெருக்கடி கொடுக்கிறதா? என்கிற கேள்விகள் எழுந்தன. இந்த யூகங்களுக்கு சிறிது நேரத்திலேயே ரஜினிகாந்தும் பதிலளித்துவிட்டார்.

அரசியல் இல்லை- திட்டவட்டம்
ரஜினிகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், எதிர்காலத்தில் தாம் அரசியலுக்கு வரப்போவது இல்லை; அரசியலுக்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம் முழுமையாக கலைக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். இதன் மூலம் நீண்டகாலமாக நீடித்த ரஜினிகாந்தின் அரசியல் பயணம் தொடர்பான அத்தனை யூகங்களுக்கும் இன்று நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications