ஆளுநருடன் ஆவலாக மீட்டிங்.. ஜிஎஸ்டின்னா நோ கமெண்ட்ஸ்.. யாருக்கான அரசியல் இது ரஜினி அவர்களே?
சென்னை: சிஸ்டம் சரியில்லை என்று கூறி மக்களுக்காக அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்துவிட்டு பின்வாங்கிய நடிகர் ரஜினிகாந்த், இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த நிலையில் ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் சென்று இருப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரப்போவதாக தெரிவித்து களத்தில் இறங்காமல் இருந்த ரஜினிகாந்த், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசியலுக்கு வரப்போவதாக பகிரங்கமாக அறிவித்து ரஜினி மக்கள் மன்றத்தை அழைத்து பொதுப்பணிகளில் ஈடுபட உத்தரவிட்டார்.
அடுத்தடுத்து கட்சியை கட்டமைக்கும் வேலைகளில் இறங்கிய ரஜினி, திடீரென கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் ஈடுபடபோவதில்லை என்று அறிவித்தது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஆதரவாளர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.

அரசியல் கருத்துக்கள்
"சிஸ்டம் சரியில்லை, ஆன்மீக அரசியல்" என்று கூறி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த ரஜினிகாந்த், அதிலிருந்து பின்வாங்கியது விமர்சனத்துக்கு உள்ளானது. ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்று கூறி பாஜகவின் இந்துத்துவ கொள்கைகளையே ஆதரிப்பதாகவும் தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக இருப்பதாகவும் பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.

அரசியலில் ஒதுங்கிய ரஜினி
குறிப்பாக தூத்துக்குடி போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று அவர் பேசியது, வலதுசாரி பத்திரிகையான துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்று கூறியது வரை அவரது பல்வேறு பேச்சுக்கள் விவாதத்திற்கு உள்ளாகின. அரசியலில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்த பிறகு அரசியல் மற்றும் பொது விசயங்கள் தொடர்பாக எந்த கருத்துக்களையும் அவர் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

சாதி தொடர்பாக பேச்சு
அவரது அரசியல் கருத்துக்களை தீவிரமாக விமர்சித்து வந்தவர்களும், அவரது நடிப்புத் திறனையும் சினிமாக்களையும் மீண்டும் கொண்டாடி வந்தனர். இந்த சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் அறிவில் சாதியும் அடங்கும் என்று பேசியதாக கூறி அவரை மீண்டும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றார்.

டெல்லி பயணம்
இந்த நிலையில், 75 வது சுதந்திர தின விழா தொடர்பாக மத்திய அரசு அமைத்த குழுவில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றார். அங்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, காஷ்மீர் பைல்ஸ் படத்தில் நடித்த அனுபம் கேர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களுடன் ரஜினிகாந்த் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகின.

ஆளுநருடன் சந்திப்பு
இந்த நிலையில் டெல்லியிலிருந்து திரும்பிய ரஜினிகாந்த் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசினார். ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடக்கும் மோதல் ஊரறிந்த விசயம். ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் சனாதனம் குறித்தும் பேசி வருகிறார். அவரது பேச்சுக்களுக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

ஆளுநருக்கு புகழாரம்
இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேசியது கூர்ந்து கவனிக்கப்பட்டது. அதன்பின்னர் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, "மரியாதை நிமித்தமாக ஆளுநர் 20 முதல் 25 நிமிடங்கள் சந்தித்து பேசினேன். அவர் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் அதிகம் நேசிக்கிறேன். இங்குள்ள மக்களின் ஆன்மீக உணர்வு அவரை கவர்ந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நண்மை செய்ய தயாராக உள்ளேன் என்று அவர் சொன்னார்." என்றார்.

நோ கமெண்ட்ஸ்
ஆளுநரிடம் அரசியல் குறித்து விவாதித்தீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், "அரசியல் பற்றி விவாதித்தோம். இப்போது அதுபற்றி சொல்ல முடியாது." என்றார். ஜி.எஸ்.டி. வரி உயர்வு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது "நோ கமெண்ட்ஸ்" என்று கூறி "அரசியலுக்கு வரும் திட்டம் இல்லை" என்று கூறினார்.

ஜிஎஸ்டி வரி ய்யர்வு
மத்திய அரசு அண்மையில் மாற்றியமைத்த ஜி.எஸ்.டி, வரி விதிப்பில் அடைக்கப்பட்ட பால், தயிர், பேக்கேஜிங் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி உயர்த்தப்பட்டது கடும் எதிர்ப்புக்கு உள்ளானது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இறுதிச் சடங்கு போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை என்றும் சுடுகாடு கட்டுவதற்கே ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும் கூறியதை பலரும் விமர்சித்தனர்.

மக்கள் பிரச்சனை
இதனால் ஏற்பட்டு இருக்கும் விலைவாசி உயர்வால் ஏழை, எளிய, சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதுகுறித்து பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், மக்கள் மீது அன்பு வைத்திருப்பதாகவும், சிஸ்டம் சரியில்லை என்றும் கூறிய ரஜினிகாந்த், விலைவாசி உயர்வு மற்றும் அதற்கு காரணமாக ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து கருத்து சொல்லாமல் சென்றிருக்கிறார்.

இதுதான் அரசியலா
ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்று வெளிப்படையாக அறிவித்த ரஜினிகாந்த், அத்தியாவசிய பிரச்சனையான ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்த தனது நிலைபாட்டை கூட தயங்குவது எந்த மாதிரியான அரசியலோ என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆயிரம் இருந்தாலும் "சிஸ்டம் சரியில்லை" என்ற ரஜினிகாந்த் சொன்னதும் உண்மைதான். ஏனென்றால் அந்த சிஸ்டத்திற்குள்தான் ரஜினியும் வருகிறார்.












Click it and Unblock the Notifications