நேற்று தர்பார் ரிலீஸ்.. இன்று ரஜினி ஆலோசனை கூட்டம்.. படம் சம்பந்தமாவா இல்லாட்டி கட்சி தொடர்பாகவா...?
சென்னையில் நிர்வாகிகளுடன் ரஜினி முக்கிய ஆலோசனை நடத்தினார்
Recommended Video
சென்னை: பழைய மொந்தையில் புதிய கள்ளு என்பதா தெரியவில்லை.. இந்த வருஷம் நிஜமாகவே கட்சியை ஆரம்பிக்க போகிறாராம் ரஜினி.. அதற்கான ஆலோசனைகள்கூட இன்று படுகமுக்கமாக நடந்து முடிந்துள்ளது.. விரைவில் புது கட்சிக்கான அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்றும் ஒரு பேச்சை கிளப்பி விட்டுள்ளனர்.
தர்பார் ரிலீஸாகி கலவையான விமர்சனங்கள் கச்சை கட்டிப் பறக்கும் நிலையில் இன்று திடீரென ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன் பேசியுள்ளார் ரஜினி. இது எதற்காக என்பதை அதிகாரப்பூர்வமாக யாரும் தெரிவிக்கவில்லை.
அரசியலுக்கு வராமலேயே பேச்சளவில் மட்டுமே அரசியலில் புழங்கி கால் நூற்றாண்டு.. கட்சி தொடங்க போகிறேன் என்று சொல்லியே 2 ஆண்டு முடிந்துவிட்டது. எனினும் இந்த வருடம் ரஜினி கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று சில மாதங்களாகவே தகவல்கள் அதிகமாக வந்தன. அந்தப் பின்னணியில்தான் ரஜினியின் அடுத்தடுத்த படங்களும் வந்தவண்ணம் உள்ளன.

பரபரப்பு
ஒரு படம் ஓடுவதற்காக வழக்கமாக வெளிவரும் பரபரப்பு சமாச்சாரத்தை போல்தான் ரஜினியின் அரசியல் வருகையும் பார்க்கப்பட்டு வருகிறது. அப்படித்தான் தர்பார் பட ரிலீசுக்கு முன்பும் நடந்தது. இதையொட்டியே, போன வருடம் ரஜினி பேசிய பல பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.. விவாத பொருளாகவும் மாறின.

அதிசயம்
கோவா திரைப்பட விழாவின்போது, "2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழக மக்கள் 100 சதவிகிதம் அதிசயம் நிகழ்த்துவார்கள்" என்றார்.. தர்பார் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், "ரஜினிகாந்த் என்கிற பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு சூட்ட வேண்டும் என இயக்குநர் பாலச்சந்தர் விரும்பி நம்பிக்கையோடு அந்தப் பெயரை எனக்கு சூட்டினார். அவருடைய நம்பிக்கை வீண் போகவில்லை. அதே போன்று தமிழக மக்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் வீண் போகாது" என்றார்.

சூசகம்
எனவே எப்படியாவது இந்த வருஷமாச்சும் கட்சியை ஆரம்பிப்பார் என்று நம்ப ஆரம்பித்தனர் ரசிகர்கள். இதனால் தர்பார் படத்திலும் ஏதாவது சூசகமாக சொல்வார் என்று நம்பி போன ரசிகர்கள் ஏமாற்றமானார்கள்.. ஏனென்றால், ''உன் தர்பார் அமைய மக்கள் தருவார்கள் நல்ல தீர்ப்பு'' என்று போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டினர்.. தலைமை செயலகத்தில் ரஜினி இருப்பது போன்ற பேனரையும் வைத்து புளகாங்கிதம் அடைந்தனர்.. ஆனால், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை வெளிப்படுத்தும் வகையில் தர்பார் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் சோடைபோய்விட்டது.

நிர்வாகிகள்
இந்த நிலையில்தான் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.. இதில் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். வழக்கமாக இங்கு ரசிகர்களையும், மக்கள் மன்றத்தினரை சந்திக்கும் ரஜினி, கட்சி தொடங்குவதற்கான பணி குறித்து இன்று பேசியதாக சொல்கிறார்கள்.

தர்பார்?
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் அவர்களிடம் ரஜினிகாந்த் மிக தீவிரமாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது வழக்கமான அரசியல் தொடர்பான சந்திப்பா அல்லது தர்பார் படத்தை பழுதில்லாமல் கொண்டு செல்வது குறித்த ஆலோசனையா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications