ஷூ கூட இல்ல.. அந்த நேரத்தில் சிவகார்த்திகேயன் அண்ணா செய்த உதவி.. இந்திய வீராங்கனை சஜனா நெகிழ்ச்சி!
சென்னை: 2018 வயநாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது இந்திய கிரிக்கெட் வீராங்கனை சஜீவன் சஜனாவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் உதவி செய்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சோசியல் மீடியாவில் பலரும் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் முடிவடைந்த மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முக்கிய வீராங்கனையாக உருவாகினார் சஜீவன் சஜனா. கேரளாவைச் சேர்ந்த சஜனாவுக்கு தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு சஜனாவின் சினிமா வாழ்க்கையே காரணம். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான கனா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் நண்பராக சஜனா நடித்திருப்பார்.

இதனால் டபியுள்யூபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சஜனா வாங்கப்பட்ட போதே, தமிழக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறினர். அதேபோல் மும்பை அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே வாழ்வா சாவா என்ற நிலையில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்திருப்பார். இதுவே அவருக்கு இந்திய அணியிலும் இடத்தை பிடிக்க காரணமாக மாறியது.
இந்த நிலையில் கிரிக்கெட் வீராங்கனை சஜனா 2018ஆம் ஆண்டு வயநாடு பெருவெள்ளத்தின் போது நிகழ்ந்த மோசமான சம்பவங்களையும், அதன்பின் நடிகர் சிவகார்த்திகேயன் உதவி குறித்தும் பகிர்ந்துள்ளார். அதில், 2018 வயநாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் என் வீடு மொத்தமாக அடித்து செல்லப்பட்டது. வீட்டில் இருந்த பொருட்களும் இல்லை.
கிரிக்கெட்டில் வென்ற கோப்பைகள், எனது கிரிக்கெட் உபகரணங்கள், விருதுகள் என்று அனைத்து காணாமல் போயின. அந்த நேரத்தில்தான் என்னை சுற்றியுள்ளவர்கள் உதவி செய்தார்கள். தமிழ் சினிமா நடிகர் சிவகார்த்திகேயன் என்னை அழைத்து, ஏதாவது உதவி தேவையா என்று கேட்டார். அப்போது அவரிடம், அண்ணா.. என் கிரிக்கெட் உபகரணங்கள் மொத்தமாக சென்றுவிட்டது..
புதிய ஸ்பைக் ஷூ அத்தியாவசிய தேவையாக உள்ளது என்று கூறினேன். அடுத்த ஒரு வாரத்தில் எனக்கு தேவையான ஸ்பைக் ஷூ, உபகரணங்கள் வந்து சேர்ந்தது. அந்த நேரத்தில் சேலஞ்சர் டிராபி விளையாட செல்ல வேண்டிய சூழலில் இருந்தேன். அதேபோல் என் குடும்பத்தினர் பாதுகாப்பு பற்றிய கேள்வி எழும் போதெல்லாம், எனக்கு பதற்றம் ஏற்படும்.
கொரோனா பரவல் வந்த போது கேரளா கிரிக்கெட் சங்கம் ஆதரவாக இருந்தது. இதன்பின் மும்பை அணி என்னை மகளிர் ஐபிஎல் தொடரில் ரூ.15 லட்சத்திற்கு வாங்கினார்கள். இப்போது எனது வருமானம் மூலமாக குடும்பத்தினர் நன்றாக இருக்கிறார்கள். வீட்டுக் கடனை விரைவாக அடைத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications