என்னை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்கிறதே ஆச்சரியமா இருக்கே அரசியல் என்ட்ரி குறித்து சிவகார்த்திகேயன்
சென்னை: அரசியலுக்கு வருவீர்களா? என்ற கேள்வியால் ஜெர்க் ஆன நடிகர் சிவகார்த்திகேயன், என்னை பார்த்து இப்படி கேட்கிறதே ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.
தமிழக அரசின் 2019, 2020 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அரசு அறிவித்திருந்தது. இந்த விருதுகளை இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
6 பெண் கலைஞர்களுக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு, ராமராஜன் உள்ளிட்ட 128 பேருக்கு கலைமாமணி விருதுகளும் இன்று வழங்கப்பட்டன.
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை
கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு 5 சவரன் தங்க பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. கலைமாமணி விருதை பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மிக மகிழ்ச்சியான தருணம். இந்த இடத்தில் நான் நிற்பதற்கு காரணமான தமிழக மக்களுக்க்கு நன்றி. இந்த விருதை கொடுத்து ஊக்கப்படுத்திய தமிழக அரசுக்கும் நன்றி என்றார் சிவகார்த்திகேயன்.
மேலும் இதுவரை செய்திகளில்தான் தலைமை செயலகத்தை பார்த்திருக்கிறேன். இப்போதுதான் முதல் முறையாக பிரமிப்புடன் கோட்டைக்கு வந்திருக்கிறேன் என கூறினார். மக்கள் பிரதிநிதியாக கோட்டைக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை. சினிமாவில் இருக்க விரும்பிய என்னை கதாநாயகனாக்கி இருக்கிறார்கள். அடுத்த படங்கள் நன்றாக ஓட வேண்டும் என்பது மட்டும்தான் என்னிடம் இருக்கிற சிந்தனை என்றார்.
அரசியலுக்கு நீங்கள் வருவீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதெல்லாம் ரொம்ப பெரிய கேள்வி.. என்னை பார்த்து இப்படி கேள்வி கேட்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்றார் சிவகார்த்திகேயன்.