"தவெக மதுரை மாநாட்டுக்கு வந்த அனைவரும் பத்திரமா வீட்டுக்கு போங்க".. வீடியோ வெளியிட்ட நடிகர் ஸ்ரீமன்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு குறித்துப் பேசி விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீமன் வீடியோ வெளியிட்டுள்ளார். தவெக தொண்டர்கள் பத்திரமாக வீட்டுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்ரீமன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையை அடுத்த பாரபத்தி பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக, பாஜக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்து பேசினார்.

மேலும் பேசிய விஜய், "நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று சொன்னார்கள், மாநாடு நடத்த மாட்டேன் என்றார்கள். இப்போ பாருங்க, நான் ஆட்சியை பிடிக்க மாட்டேன் என்கிறார்கள். தமிழக அரசியலையே மாற்றும் மாநாடு இது, நாங்கள் எதிரிகள் சொல்லும் எதையும் காதில் போட்டுக்கொள்ள மாட்டோம். எல்லா கூக்குரலையும் சிரிப்போடு கடந்து வந்துள்ளோம். யாராலும் தடுத்து நிறுத்த முடியாத குரல் இது. இந்த கூட்டம் ஓட்டாக மட்டும் அல்ல; ஆட்சியாளர்களுக்கான வேட்டாகவும் மாறும். ஆட்சியை பிடித்துக் காட்டட்டுமா?" என்றார்.
இந்நிலையில், தவெக மதுரை மாநாடு முடிவடைந்து, மாநாட்டு திடலில் இருந்து தொண்டர்கள் கலைந்து சென்றுள்ள நிலையில், மதுரை மாநாடு குறித்துப் பேசி விஜய்யின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீமன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசியுள்ள ஸ்ரீமன், "தவெக முதல் மாநாட்டில் கலந்து கொள்வதற்கான பாக்கியம் எனக்கு கிடைத்தது. அப்போது கூடவே இருந்தோம். நான் நடித்துள்ள கன்னட படம் நாளை வெளியாவதால் இதை தவிர்க்க முடியாததால் என்னால் மதுரை தவெக மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த திருவிழாவில் பங்கேற்க முடியவில்லையே என ஆதங்கமாக உள்ளது.
நண்பரை பொறுத்தவரை நாம் செய்யும் வேலையில் சிரத்தையுடன் செயல்பட வேண்டும் என்பதுதான். இந்த மாநாட்டிற்கு வந்த அத்தனை பேரும் பத்திரமா வீட்டுக்குப் போக வேண்டும். எந்த விழாவாக இருந்தாலும் எல்லோரும் ஜாக்கிரதையாக போய்விட வேண்டும் என்பதே விஜய்யின் மிகப்பெரிய பிரார்த்தனையாக இருக்கும். அதனால் அனைவரும் பத்திரமா வீட்டுக்கு போய் சேருங்க" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications