கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த நடிகர் சுபா வெங்கட் - திரைப்படத்துறையினர் அதிர்ச்சி
கோலிவுட்டில் பல பிரபலங்கள் கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர். இன்று நடிகர் சுபா வெங்கட் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்.
சென்னை: நடிகரும், சினிமா விமர்சகருமான சுபா வெங்கட் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளார். கோலிவுட்டில் பல பிரபலங்கள் கொரோனா பாதிப்பால் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர். சுபா வெங்கட்டின் மரணத்திற்கு திரை உலக பிரபலங்களும் அவரது நண்பர்களும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வெங்கட் சுபா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சுபா வெங்கட் சின்னத்திரையில் ஒளிபரப்பான பல்வேறு டிவி சீரியல்களில் நடித்துள்ளார். யூ டியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்த அவர் மொழி, அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவில் இரண்டாம் அலைக்கு நாள் ஒன்றிற்கு 3500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது.
கடந்த சில மாதங்களில் மட்டும் தொடர்ந்து பல திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிக்சை பெற்று பலர் குணமடைந்தாலும் அடுத்தடுத்து பலர் மரணமடைந்து வருகின்றனர். இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த், நடிகர் பாண்டு உள்ளிட்டவர்கள் வரிசையில் தற்போது சுபா வெங்கட் உயிரிழந்துள்ளார்.