இதுதான் மாஸ்.. முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடியை அள்ளித்தந்த நடிகர் சூர்யா குடும்பம்.. சூப்பர்!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூர்யா குடும்பம் ரூபாய் 1 கோடியை அளித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் விடுத்து இருந்தார். பொது மக்கள், சமூக சேவை அமைப்புகள், நிதி நிறுவனங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி கொடுத்து உதவலாம்.
நன்கொடைகளுக்கு 100% வருமான வரி அளிக்கப்படும். பேரிடர் காலத்தில் பெறப்படும் நிதி கொரோனா தடுப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று குறிப்பிட்டு இருந்தனர்.
நிதி
இதற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேமிப்புக் கணக்கு விவரங்களையும் முதல்வர் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சூர்யாவின் குடும்பம் ரூபாய் 1 கோடியை அளித்துள்ளது.
நேரில் நிதி
நடிகர் சூர்யா, நடிகர் சிவக்குமார், நடிகர் கார்த்தி ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து இதற்கான காசோலையை வழங்கினார்கள். ஆக்சிஜன், மருந்துகள், வேக்சின் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வாங்குவதற்கு உதவியாக முதல்வரின் நிவாரண நிதிக்கு இந்த காசோலையை வழங்கினார்கள். முதல்வர் ஸ்டாலின் இவர்களின் நிதியை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.
வரவேற்பு
நடிகர் சூர்யாவின் குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை நிவாரணமாக வழங்கியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரையுலகில் இருந்து பெரிதாக இன்னும் யாரும் நிவாரண நிதி கொடுக்காத நிலையில் முதல் ஆளாகி சூர்யாவின் குடும்பம் 1 கோடி ரூபாயை கொடுத்துள்ளது. இணையத்தில் பலரும் நடிகர் சூர்யா, மற்றும் கார்த்தியை இதற்காக பாராட்டி வருகிறார்கள்.
பணம் செலுத்த முடியும்
தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள வங்கி விவரத்தின்படி பல்வேறு வகைகளில் முதல்வரின் கணக்கிற்கு பணம் செலுத்த முடியும். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சேமிப்புக் கணக்கு எண் - 117201000000070, IFSC - IOBA0001172 என்ற வங்கி கணக்குக்கு நிவாரண நிதியை மக்கள் வழங்கலாம். அல்லது tncmprf@iob என்ற UPI IDஐ பயன்படுத்தியும் கொரோனா நிவாரண நிதியை வழங்கலாம். http://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணையதளம் மூலமாக நிதியை செலுத்தலாம்.