நாங்கள் மேலே உயர எங்கள் பின்னால் ஒரு பெரிய பலம் இருக்கு.. நடிகர் சூர்யா உருக்கம்! ஜோ நெகிழ்ச்சி
சென்னை: நாங்கள் மேலே உயர எங்கள் வீட்டு பெண்கள்தான் காரணம் என நடிகர் சூர்யா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் விருமன் என்ற படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் வசூல் சாதனையை படைத்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜெய்பீம் திரைப்பட வழக்கு.. நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேலுக்கு ஆறுதல்! வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்
விருமன் பட விழா
இந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசிய போது, விருமன் படத்திற்காக கேமராவுக்கு பின்னால் உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எந்த வெற்றியும் தனி வெற்றியாகாது. குடும்பங்களும் ஒரு முக்கிய காரணம். எங்களை மேலே உயர்த்தி விட எங்களுக்கு பின்னால் ஒரு பலம் உள்ளது. அவர்கள் எங்கள் வீட்டிலிருக்கும் பெண்கள்தான்.
தியாகங்கள்
அவர்களின் தியாகங்கள் அதில் அடங்கியுள்ளது. ஆண்கள் வெற்றி பெறுவது சுலபம், ஆனால் பெண்கள் 10 மடங்கு கஷ்டப்பட்டால்தான் அந்த பெயர் பெண்களுக்கு கிடைக்கும். அவர்கள் நிறைய விஷயங்களை தியாகம் செய்துள்ளனர். தியாகம் என்பதற்கு நிறைய வார்த்தைகள் உள்ளன. இங்கு எல்லாரையும் அழைத்து மரியாதை செய்ய வேண்டும் என நினைத்தோம்.
பெண்கள்
பெண்களை முன்னால் வைத்து வாழ்க்கையை பார்த்தால் வாழ்க்கை இன்னும் அழகாக தெரியும் என்றார் சூர்யா. இதை சூர்யா மனைவி ஜோதிகா நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தார். இதை தொடர்ந்து பேசிய நடிகர் கார்த்தியும், பெண்களுக்கு இன்று ஒரு நாளாவது ஓய்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்தோம் என்றார்.
நீட் தேர்வு
அண்மைக்காலமாக நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் நீட் தேர்வு, நீட் தேர்வால் நடைபெறும் தற்கொலைகள், இயற்கை விவசாயம் உள்ளிட்டவற்றிக்காக குரல் கொடுத்து வருகிறார்கள். அது போல் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் இவர்கள் குரல் கொடுத்துள்ளனர். சமூகம் சார்ந்த பிரச்சினைகளை தங்கள் திரைப்படங்களிலும் சமூகவலைதளங்களிலும் பேசி வருகிறார்கள். சூர்யா தனது அகரம் அறக்கட்டளை மூலம் வசதி வாய்ப்பில்லாத குழந்தைகளுக்கு கல்வியை கொடுத்து வருகிறார். இவரது அறக்கட்டளை மூலம் படித்த எத்தனையோ ஏழை குழந்தைகள் தங்கள் லட்சியத்தை அடைய உதவியுள்ளார்.